Tamilnadu
oi-Halley Karthik
சேலம்: கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், வேறு வழியின்றி அம்மாநில அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.
கபினி அணையிலிருந்து காவிரிக்கு 6,600 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கேஎஸ்ஆர் அணையிலிருந்து 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இந்த நீர் தற்போது மேட்டூரை வந்தடைந்திருக்கிறது.

மேட்டூர் அணையின் நிலவரம்
நேற்று நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,887 கனஅடியாக இருந்தது. இது தற்போது 10,485 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. அணையின் நீர்மட்டம் 90.92 அடியாகவும், நீர் இருப்பு 53.70 டிஎம்சியாகவும் இருக்கிறது. டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. நாளை முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையை திறக்க இருக்கிறார். அணை 90 அடியை எட்டினால்தான் நீர் திறக்கப்படும் என்று இருந்த நிலையில்.. தற்போது அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியிருக்கிறது.
தண்ணீர் திறப்பு
என்னதான் அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியிருந்தாலும், குறுவை சாகுபடிக்கு போதுமான அளவுக்கான நீர் இது கிடையாது. ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி வீதம் 120 நாட்களுக்கு 120 டிஎம்சி தண்ணீர் தேவை. ஆனால் அணையின் நீர் இருப்பு 53.70 டிஎம்சிதான். மட்டுமல்லாது, 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீரை திறப்பதாக அரசு சொல்லியிருக்கிறது. இதற்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். கர்நாடகாவிடமிருந்து உரிய தண்ணீரை வாங்கி, அதை 100-120 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடகா நமக்கு வினாடிக்கு 9,000 கனஅடி நீரை திறக்க வேண்டும். ஆனால், இப்போது வரை தமிழகத்திற்கான நீர் வரத்து 10,485 கனஅடியாகத்தான் இருக்கிறது.
விவசாயிகள் கவலை
நிலைமை இப்படியே இருந்தால் விஜய் அணையை திறந்தாலும் கூட டெல்டா மக்களால் பெரிய அளவுக்கு பயன்பெற முடியாது. அணையிலிருந்து வெளியே வரும் தண்ணீர் திருச்சி, அரியலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும்தான் பயன்படும். காரணம், இந்த மாவட்ட விவசாயிகளிடம் பெரிய அளவில் போர் வாட்டர் கனெக்ஷன் இருக்கிறது. ஏற்கெனவே குறுவை சாகுபடியை இவர்கள் தொடங்கிவிட்டார்கள். ஆனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துக்கொண்டே வருகிறது.
இந்த நேரத்தில் அணையை திறந்தால், காவிரி நீரை வைத்து மீதமுள்ள நாட்களுக்கு பிரச்சனை இல்லாமல் சாகுபடியை செய்துவிடுவார்கள்.
வறண்டு போன டெல்டா
மற்றொருபுறம் கீழ் டெல்டா மாவட்டங்களில்.. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் பெரிய அளவில் போர் வாட்டர் செட்டப் கிடையாது. இவர்கள் முழுக்க முழுக்க காவிரி நீரை வைத்துதான் குறுவை சாகுபடியை செய்வார்கள். 120 நாட்களுக்கு தண்ணீர் தேவையாக இருக்கும்போது.. வெறும் 45 நாட்களுக்கு மட்டும் தண்ணீரை திறந்தால்.. இதை நம்பி குறுவை சாகுபடியில் விவசாயிகள் இறங்க மாட்டார். அப்படியே இறங்கினாலும் அது பெரிய நஷ்டத்தைதான் கொடுக்கும்.
எனவே தமிழக அரசுக்கு இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன், கர்நாடகாவிடம் சண்டை போட்டு நமக்கான தண்ணீரை கேட்டு பெருவதுதான். அதை விஜய் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




