Tamilnadu
oi-Vignesh Selvaraj
நெல்லை: கூடங்குளம் அருகே நள்ளிரவில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி துப்பாக்கி செல்வம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தோட்டத்தில் தங்கி இருந்த அவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் செல்வ முருகன் என்ற செல்வம் (41). இவர் மீது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 6 கொலை வழக்குகள் உள்பட 27 வழக்குகள் உள்ளன. தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஏ பிளஸ் ரவுடிகள் பட்டியலில் உள்ளார். இவர், நாகர்கோவிலில் ஒரு கொலை சம்பவத்தில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தியதற்காக ‘துப்பாக்கி செல்வம்’ எனப் பெயர் வந்தது.

இவருக்கு தூத்துக்குடியில் எதிரிகளால் அச்சுறுத்தல் இருந்ததால் உள்ளூரில் தங்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து அவர் மனைவியுடன் குமரி மாவட்டம், சாமிதோப்பு அருகே கரும்பாட்டூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செல்வம் தாயார் ஊரான நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஈத்தங்காடு பகுதிக்கு வந்து அங்கு வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை சங்கநேரியில் தாயாருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பக்கத்து தோட்டத்தில் உள்ளவர்கள் செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் நெல்லை எஸ்.பி விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கூடங்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
செல்வம் தினமும் தனது நண்பர் ஒருவருடன் தோட்டத்தில் தங்கியுள்ளார். நேற்று முன்தினமும் செல்வம் நண்பருடன் மது அருந்தி விட்டு தோட்டத்தில் தூங்கியுள்ளார். நள்ளிரவில் இவர் தோட்டத்தில் இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் அவரை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, 2 பேர் மட்டுமே தோட்டத்திற்கு சென்றுள்ளனர். தொடர்ந்து செல்வத்தின் நண்பருக்கு செல்போனில் போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. எனவே அவர்களுக்குள் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதா? இல்லை வேறு யாரும் தோட்டத்தில் புகுந்து கொலை செய்தனரா? என தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

