மகாபலி மன்னன் ஆட்சி செய்த காலம், கேரளாவின் பொற்காலமாக போற்றப்படுகிறது. ஓணம் பண்டிகை என்பது வருடத்திற்கு ஒருமுறை தங்களை காண வரும் மகாபலி மன்னனை மகிழ்ச்சியுடன் வரவேற்று, உபசரிக்கும் நாளாகும். மகாபலி மன்னன் மகாவிஷ்ணுவின் தீவிர பக்தர்கள். மகாவிஷ்ணுவால் சிரஞ்ஜீவி வரம் பெற்றவர். அதனால் அவரது அருளும், அவரை போலவே பெருமாளின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த பாரம்பரிய சடங்குகளை மக்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
மங்களம், செழிப்பு, மகிழ்ச்சி, உற்சாகம், செல்வ வளம், ஒற்றுமை, பாரம்பரிய பண்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்த 3 விஷயங்களை ஓணம் பண்டிகை திருநாளில் செய்வதால், அது நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நிலைத்து இருக்க மகாபலி மன்னன் அருள் செய்வார் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் தான் ஏழை- பணக்காரர்கள், ஜாதி, மத வேற்றுமைகள் இல்லாமல் அனைவரது வீடுகளிலும் அத்தப்பூ கோலமிட்டு, பாரம்பரிய உடை அணிந்து, ஓணம் சத்யா விருந்து படைத்து, மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

புராண கதைகளின் படி, மகாபலியின் பக்தி, வேள்வி ஆகியவற்றால் பயந்த தேவர்கள், தங்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என அஞ்சி, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணுவும், குள்ளமான அந்தண சிறுவனாக வாமனர் அவதாரம் எடுத்து பூமிக்கு வருகிறார். தினமும் தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் கேட்பவற்றை தானமாக கொடுக்கும் வழக்கம் கொண்ட மகாபலியிடம், மூன்றடி நிலத்தை தானமாக கேட்கிறார்.
அசுர குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும், நிலத்தை தானமாக தர ஒப்புக் கொள்கிறார் மகாபலி. தானம் தருவதற்காக கமண்டலத்தில் இருக்கும் தண்ணீரை வாமனரின் கையில் ஊற்றியதும், விண்ணும் மண்ணுக்குமாக திரிவிக்ரமராக வளர்ந்து நின்ற வாமனர், முதல் அடியால் விண்ணுலகையும், இரண்டாவது அடியில் பூமியையும் அளந்த பிறகு, மூன்றாவது அடி என மகாபலியிடம் கேட்கிறார். வந்திருப்பது திருமாலை என்பதை உணர்ந்த மகாபலி, மூன்றாவது அடியை தனது தலை மீது வைக்கும் படி கேட்கிறார்.
அவரது தலை மீது தனது திருவடியை வைத்த மகாவிஷ்ணு, மகாபலியை பாதாள உலகிற்கு அனுப்பி வைக்கிறார். மகாபலிக்கு சிரஞ்ஜீவி வரமளித்த திருமால், அவரது வேண்டுகோளை ஏற்று, வருடத்திற்கு ஒருமுறை பூமிக்கு வந்து தன்னுடைய நாட்டு மக்களை சந்திக்கும் வரத்தையும் அளிக்கிறார். மகாபலி, தனது மக்களை காண வரும் இந்த திருநாளையே ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடுகிறார்கள்.



