சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதைத் தொடர்ந்து, அம்பலங்கொட காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 24 ஆம் திகதி இரவு வீடொன்றிற்கு அருகில் வைத்து தனது தந்தையிடம் தேசிய அடையாள அட்டையைக் கேட்டபோது, அதனை உடனடியாகக் காண்பிக்க முடியாததால் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த நபரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
அடையாள அட்டையை எடுத்துக் காட்டுவதற்காக அருகிலுள்ள வீட்டிற்கு அதிகாரிகளை அழைத்துச் செல்லத் தனது தந்தை முன்வந்த போதிலும், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர் விளக்கம்
மேலும், காவல் நிலையத்திலும் தனது தந்தை தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், காவல்துறை இச்சம்பவம் குறித்து வேறுவிதமான விளக்கத்தை அளித்துள்ளது.
அதன்போது, குறிப்பிட்ட நபர் மதுபோதையில் வீதியில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயன்றதால் கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறியுள்ளது.
தனி விசாரணை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் நேற்றைதியனம்(25) ஓகஸ்ட் அன்று பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் பலபிட்டிய மேலதிக நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, சம்பவம் தொடர்பாக காவல்துறைத் தலைமை ஆய்வாளரின் (IGP) உத்தரவின் பேரில், காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் (DIG) மேற்பார்வையில் தனி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் காவல்துறையினருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

