Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் நிலையில், இதற்கான காரணத்தை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். தற்போது தங்கம் விலை ஏன் உயர்கிறது என்பது குறித்த விரிவாக விளக்கியுள்ள அவர், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை இப்போது ஏறினாலும் கூட அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்த ஆரம்பிக்கும்போது சரியும் என ஆனந்த் சீனிவாசன் கூறியிருக்கிறார். இருப்பினும், அப்போது சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை எப்படி இருக்கிறது.. ரூபாய் மதிப்பு என்னவாக இருக்கிறது என்பதை பொறுத்தே சரிவு இருக்கும் எனவும் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது குறித்து ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “கோல்டு மறுபடியும் ஏற ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்கா தனது 30 ஆண்டு டிரஷரி பாண்டுகளை திரும்ப வாங்க போவதாக சொல்லி இருக்கிறது. அதுவே முக்கிய காரணம். இதுபோல பைபேக் செய்தால் என்ன ஆகும் என்றால், வட்டி விகிதம் குறையும்; பாண்ட் விலை ஏறும். பாண்ட் விலை ஏறும்போது அதன் பிரீமியமும் அதிகரிக்கும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை 4 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்டுகளை வாங்கப் போவதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
தங்க மார்கெட்
தங்கத்தை மார்கெட் ஏன் தொடர்ந்து புஷ் செய்கிறது என்பதற்கு தெளிவான காரணம் இல்லை. தற்போதைய சூழலில் தங்கத்தின் விலையை முக்கியமாக இரண்டு விஷயங்கள் பாதிக்கின்றன. ஒன்று ஃபிஸ்கல் பாலிசி (fiscal policy), மற்றொன்று மானிட்டரி பாலிசி (monetary policy). மானிட்டரி பாலிசி என்பது எந்த வட்டி விகிதத்தில் கடன் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது. அதாவது எவ்வளவு கடன், என்ன வட்டி விகிதம் என்பது மானிட்டரி பாலிசியில் முடிவு செய்யப்படுகிறது. ஃபிஸ்கல் பாலிசி என்பது எவ்வளவு கடன் வாங்குவது என்பது தொடர்பானது.
அமெரிக்காவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, 2008 நிதி நெருக்கடி மற்றும் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக கடன் வாங்கப்பட்டது. அதன் பிறகும் கடன் வாங்குவதை குறைக்கவில்லை. இதனால், மானிட்டரி பாலிசியை விட ஃபிஸ்கல் பாலிசிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்று மார்கெட் நினைக்கிறது. குறைந்த வட்டி இருக்கும் சூழ்நிலையில், பாண்ட் வைத்து ஃபிஸ்கல் பாலிசியானது மானிட்டரி பாலிசியை ஆதிக்கம் செலுத்துகிறது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.
சர்வதேச மார்கெட்
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 4600 டாலரை தாண்டியது. குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை மேலும் உயரலாம். ஆனால் அமெரிக்காவில் இப்போது இன்னொரு பிரச்சினை வந்திருக்கிறது. அங்கு வளர்ச்சி 1.15 சதவீதம் அல்லது 1.5 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கிறது. வளர்ச்சி 2 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதை தொட முடியவில்லை. இதனால் பணவீக்கம் அதிகமாக இருந்தாலும் வட்டி விகிதத்தை உயர்த்த முடியாத சூழல் ஏற்படும்.
வளர்ச்சி மந்தமாக இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த மாட்டார்கள் என்று சந்தை நினைக்கிறது. காரணம் இப்போது அமெரிக்க பெடரல் வங்கி தலைவராக இருக்கும் கெவின் வார்ஷ். அவர் வட்டி விகிதத்தை உயர்த்த மாட்டார் என்ற எதிர்பார்ப்பில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இப்போது தங்கம் வாங்கலாமா என்ற கேள்விக்கு வருவோம். அவர்கள் நியாயமாக செயல்பட்டு வட்டி விகிதத்தை உயர்த்தினால், தங்கத்தின் விலை விழும்.
அடுத்து என்ன
அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்த ஆரம்பிக்கும்போது, தங்கம் விலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே அதன் சரிவு இருக்கும். தங்கத்திற்கு 4,000 டாலர் என்பது ஒரு குறைந்தபட்ச விலையாக செட் ஆகிவிட்டது. கடந்த முறை சர்வதேச சந்தையில் தங்கம் விலை 5,800 வரை சென்றபோது இந்தியாவில் ரூ.16,000க்கு விற்பனையானது. ஆனால், இந்த முறை அந்தளவுக்கு போனால் தங்கம் விலை ரூ.20,000ஐ கூட தொடும்.
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நமது மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியது. இரண்டாவது, நம்முடைய ரூபாயின் மதிப்பு கீழே விழுந்திருக்கிறது” என்றார்.




