சுதத் – எச். எம். ஹேவா
நோர்வூட் பிரதேச செயலகத்தின் ‘அஸ்வெசும’ நலன்புரி நிதி மோசடித் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் 25ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அச்சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களான அப்கொட் ஸ்டொக்ஹோம் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி லலிதா மற்றும் டிக்கோயா கார்ப்பெக்ஸ் (Carpeks) பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் துஷாதரனி ஆகிய இருவரும் 25ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களது சட்டத்தரணிகள் இருவருக்கும் பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது, ஹட்டன் விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இவர்களுக்குப் பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர். அதன்பின்னர் இவ்விருவரின் விளக்கமறியலும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல், முறைகேடாகத் தமது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக் கொண்டுள்ளதாக நோர்வூட் பிரதேச செயலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின்பேரில் மற்றும் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாங்க கொடமுன்னவின் மேற்பார்வையின் கீழ், ஹட்டன் பொலிஸின் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


