அந்த வீட்டைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறும் சங்கக்கார, “இதுதான் நமக்கு ஏற்ற வீடு” என்று தாங்கள் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவும் அவரது மனைவி யெஹாலியும், காலிக் கோட்டைக்குள் அமைந்துள்ள சுமார் 120 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வீட்டொன்றை, அதன் வரலாற்று மற்றும் கட்டடக்கலை சிறப்புகளைப் பாதுகாத்தவாறு நவீன சொகுசு இல்லமாக மாற்றியுள்ளனர்.
கிரிக்கெட் உலகில் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் குமார் சங்கக்கார, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 38 டெஸ்ட் சதங்கள் உட்பட 28,000க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், வர்ணனையாளர், நிர்வாகி மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கிரிக்கெட்டுக்கு அப்பால், இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காலி நகரத்தின் பாரம்பரிய கட்டடக்கலையிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

யுனெஸ்கோ பாரம்பரியப் பகுதியில் அமைந்துள்ள வீடு
காலிக் கோட்டை 16ஆம் நூற்றாண்டு முதல் போர்த்துகீசியர் மற்றும் பின்னர் டச்சுக்காரர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை நகரமாகும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட கோட்டை நகரங்களில் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ள முக்கிய எடுத்துக்காட்டாக இது யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதிக்குள் அமைந்துள்ள சுமார் 120 ஆண்டுகள் பழமையான டச்சு காலத்து வீட்டையே சங்கக்கார தம்பதியினர் 2008ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
அந்த வீட்டைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறும் சங்கக்கார, “இதுதான் நமக்கு ஏற்ற வீடு” என்று தாங்கள் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் வீட்டை வாங்கிய பின்னர் முதல்முறையாக அதன் உட்பகுதிக்குள் சென்றபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு உட்பகுதி மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்திருந்தது.

வரலாற்றைப் பாதுகாத்த மறுசீரமைப்பு
பழமையான கட்டிடத்தின் தனித்துவத்தைப் பாதுகாத்தபடியே அதனை நவீன குடும்ப இல்லமாக மாற்றுவதற்காக கட்டிடக் கலைஞர்கள் ஜீவன் டி சோசா, முராத் இஸ்மாயில் மற்றும் உட்புற வடிவமைப்பாளர் அன்னிகா பெர்னாண்டோ ஆகியோரின் உதவியை சங்கக்கார தம்பதியினர் நாடினர்.
வீட்டின் பழமையான கட்டமைப்பை அழிக்காமல், இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும் கட்டடக்கலை அம்சங்களுடன் நவீன வசதிகளை இணைப்பதே இந்த மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
நான்கு படுக்கையறைகளைக் கொண்ட இந்த இல்லத்தில் மூன்று முற்றவெளித் தோட்டங்கள் உள்ளதுடன், கூரையில் நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கலங்கரை விளக்கத்தின் அழகிய காட்சியையும் ரசிக்க முடியும்.
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் கலைப்படைப்புகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

வீட்டுக்குள் பிரம்மாண்ட சிற்பம்
இந்த இல்லத்தின் முக்கிய கலை ஈர்ப்புகளில் ஒன்றாக இலங்கை கலைஞர் பிரகீத் மனோஹன்சாவின் பிரம்மாண்டமான சிற்பம் அமைந்துள்ளது.
அந்தச் சிற்பம் வீட்டின் கதவுகள் வழியாக எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு பெரியதாக இருந்ததால், மறுசீரமைப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அதனை வீட்டுக்குள் கொண்டு வந்து நிறுவியுள்ளனர். பின்னர் அந்தச் சிற்பத்தை மையமாகக் கொண்டு வீட்டின் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பழமையும் நவீனமும் இணைந்த வடிவமைப்பு
பழமையான கட்டிடத்தின் குறுகிய மற்றும் வரையறுக்கப்பட்ட இடவசதிக்குள் நவீன வசதிகளை ஏற்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக கட்டிடக் கலைஞர் முராத் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
காலிக் கோட்டையின் வரலாற்று கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததுடன், பழைய சுவர்களை இடிப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பல பகுதிகளில் பழைய சுவர்கள் எவ்வாறு பவளப் பாறைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டன என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவை திறந்த நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அதேபோல், சுவர்களில் பல ஆண்டுகளாக காணப்பட்ட பழைய பூச்சுகள் மற்றும் இயற்கையாக ஏற்பட்ட நிற மாற்றங்களையும் அன்னிகா பெர்னாண்டோ பாதுகாத்துள்ளார். ஈரப்பதம் மற்றும் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய வடிவமைப்புடன் இணைந்து வீட்டுக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன.
இவ்வாறு, குமார் சங்கக்கார மற்றும் யெஹாலியின் தனிப்பட்ட ரசனை, நவீன வாழ்க்கை முறை மற்றும் இலங்கையின் வரலாற்று பாரம்பரியம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த 120 ஆண்டுகள் பழமையான வீடு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

