India
oi-Halley Karthik
டெல்லி: டெல்லி துவாரகாவில் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த கர்ப்பிணி அதிகாரி நாசியா கானம் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலைக்கு காரணம் கணவர் மற்றும் மாமியார் வீட்டு கொடுமைதான் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர், குடும்ப வன்முறையால் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பாதுகாப்புத்துறையில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவி பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தவர்தான் 30 வயதான நாசியா கானம். டெல்லி துவாரகாவில் உள்ள அவரது வீட்டில் கடந்த 21ம் தேதி அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாசியா கானம் கடந்த ஏப்ரல் 11 அன்று அஜ்ம் அலி கான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் தங்கள் மகளை தொடர்ந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக நாசியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாசியாவின் தந்தை தோவாப் கான் கூறுகையில், “எனது மகள் அவளுக்கு நேர்ந்த தொல்லைகளை எனக்கு செல்போன் மூலம் அடிக்கடி சொல்லி வந்தாள். பிரச்சனை பற்றி பேசுவோம் என்று நான்தான் சமாதானம் சொன்னேன். ஆனால், கணவரின் என்றாவது ஒரு நாள் திருந்துவார் என்று நாசியா நம்பினார். நாசியாவின் நம்பிக்கை கடைசியில் பொய்யானது. ஆக.21 அதிகாலை 4 மணியளவில் என் மகள் தற்கொலை செய்துக்கொண்டாள். கடைசியாக நாங்கள் அவரை சடலமாகத்தான் பார்க்க முடிந்தது” என்று கூறினார்.
இந்த சம்பவம் தற்கொலை அல்ல.. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்று நாசியாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாசியாவின் கணவர், நாசியாவுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவருக்கும், நாசியாவுக்கும் வாக்குவாதம் வெடித்ததாகவும்.. பின்னர் நாசியா ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார். எவ்வளவு தட்டியும் கதவு திறக்கப்படாததால்.. ஜன்னல் வழியாக வந்து பார்த்த போது.. நாசியா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. பாதுகாப்புத்துறையில் உள்ள பெண்ணுக்கே இந்த நிலைமை எனில்.. சாமானிய பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

