Cricket
oi-Yogeshwaran Moorthi
பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடி வரும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்களை குவித்துள்ளார். வடக்கு மண்டல அணி 161 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 251 ரன்களை எடுக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ். கடந்த சீசனில் முதல் பாதியில் அபாரமாக பவுலிங் செய்த அன்சுல் கம்போஜ், சிஎஸ்கே அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக மாறினார். அண்மையில் ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தையின் போது அன்சுல் கம்போஜை வாங்க மும்பை அணி முயன்றதாக சொல்லப்பட்டது. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஆடிய டெஸ்ட் தொடரில் அன்சுல் கம்போஜ் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அன்சுல் கம்போஜிடம் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் இந்திய அணிக்குள் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் அன்சுல் கம்போஜ் தீவிரமாக இருக்கிறார். இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் அன்சுல் கம்போஜ் வடக்கு மண்டல அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய ஆட்டத்தில் மேற்கு மண்டல அணியை எதிர்த்து வடக்கு மண்டல அணி களமிறங்கியது. 116 ரன்களுக்கு வடக்கு மண்டல அணி நல்ல நிலையில் இருந்த போது, திடீரென மேற்கு மண்டல அணி விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டை கைப்பற்றியது. இதனால் 161 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அன்சுல் கம்போஜ் களமிறக்கப்பட்டார்.
அவர் களமிறங்கியது முதலே அதிரடியாக ரன்களை சேர்த்தார். டவுன் தி டிராக் இறங்கி வராமல் நின்று கொண்டு அசால்ட்டாக சிக்சர்களை பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய அன்சுல் கம்போஜ் 52 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக வடக்கு மண்டல அணி 251 ரன்களை எடுத்து அசத்தியது.
அன்சுல் கம்போஜ் இதற்கு முன் பேட்டிங்கில் ரன்கள் சேர்த்திருந்தாலும், இவ்வளவு அதிரடியாக விளையாடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் அன்சுல் கம்போஜ் பேட்டிங்கிலும் பயிற்சி மேற்கொள்வது தெரிகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

