ஈரான் மீது விதிக்கப்படவுள்ள புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் திட்டத்திற்குச் சீனா ஒத்துழைக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேரடித் தடைகள்
இந்தநிலையில் ஈரானுடன் தொடர்ந்து வர்த்தக உறவு வைத்துள்ள சீனா மீது அமெரிக்கா நேரடித் தடைகளை விதிக்குமா என்று கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த ஸ்காட் பெசென்ட், இதுபோன்ற பல உணர்வுபூர்வமான விவாதங்களைத் தனிப்பட்ட முறையில் பேசுவதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறைய வேண்டும் என்றும் சீனா உட்பட அனைவரும் விரும்புகிறார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா தனக்குத் தேவையான மொத்த எரிசக்தியில் 50 சதவீதத்தைப் பாரசீக வளைகுடாப் பிராந்தியத்தில் இருந்தே (Persian Gulf) இறக்குமதி செய்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அதனால் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பது சீனாவிற்கே பெரிதும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் ஈரானுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்கும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்தநிலையில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியைச் சீனா வாங்கி வருவதன் அடிப்படையில் அமெரிக்க நிதித்துறைச் செயலாளரின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

