India
oi-Vishnupriya R
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகே உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இரவு, பகலாக தண்ணீருக்குள்ளேயே வாழ்ந்து வந்த சிறுவனுக்கு உதவ ஆனந்த் அம்பானி முன் வந்துள்ளனர்.
பெல்டாங்காவைச் சேர்ந்த இக்பால் எனும் சிறுவன் இக்பால். இவருக்கு அடிக்கடி உடலில் தீப்பற்றி எரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த சிறுவன் எந்த நேரமும் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருகிறார்.

அவர் தண்ணீரை விட்டு வெளியே வந்தாலே உடல் தீப்பற்றி எரிவது போன்று இருப்பதால் வெளியே வராமல் தண்ணீரிலேயே இருந்து வந்தார். அவ்வாறு தண்ணீரிலேயே இருக்கும் அந்த சிறுவன் அங்கிருந்தபடியே உணவு, நொறுக்குத்தீனி சாப்பிடுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இதை பார்த்த ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி, சிறுவனுக்கு உதவ முன் வந்தார். அதன்படி சிறுவன் விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்டு ரிலையன்ஸ் குழும மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர் ஏற்கெனவே பல முறை மருத்துவமனைக்கு சென்ற போதிலும் சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்க முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வந்ததும் தெரியவந்தது.
முன்னதாக பல மணி நேரமாக தண்ணீருக்குள்ளேயே இருப்பதால் சிறுவனின் உடல்நிலை மோசமடைய வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் ஆனந்த் அம்பானியின் முயற்சியால் அந்த சிறுவனுக்கு மருத்துவ உதவி கிடைத்துள்ளது. அவர் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியிருப்பதாவது: இந்த சிறுவனுக்கு எரித்ரோமேலால்ஜியா எனும் அரிதான நோய் இருக்கலாம். அதாவது நரம்பு, ரத்தக் குழாய் தொடர்பான நோய் இதுவாகும்.
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோலில் உள்ள ரத்தக் குழாய்கள், நரம்புகள் அதிக வெப்பம், தாங்க முடியாத எரிச்சலை தரும். சில நேரங்களில் தோல் சிவந்து இருக்கும். தோலில் உள்ள நுண்ணிய சென்சிட்டிவ் நரம்புகள் சேதமடைந்தால் மூளைக்கு தவறான தகவல் போய் உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போல் தோன்றும்.
இதற்காக இந்த நோய் கொண்டவர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதையே விரும்புவார்கள். அப்படி செய்வது மிகவும் ஆபத்தானது.
தண்ணீரிலேயே நாட்கணக்கில் மூழ்கி இருந்தால் தோல் வெளுத்து போகும். பாக்டீரியா, பூஞ்சை தொற்ரு ஏற்படும். உடல் வெப்ப நிலை குறையும், கடுமையான மருத்துவச் சிக்கல்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

