கோலாலம்பூர்:
மலாக்கா சென்ட்ரல் பேருந்து முனையம் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகக் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்கி வருவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என மலாக்கா சென்ட்ரல் நிறுவனம் (MSSB) மறுத்துள்ளது.
முனையத்தின் உள்பகுதி வெப்பநிலை, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பயணிகள், வர்த்தகர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில் குளிர்சாதன அமைப்பு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதன் பொது மேலாளர் சுல்ஹாஃப்னி முகமட் ராயிஸ் தெரிவித்தார்.
முனையத்தின் வசதிகள் குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வப் புகார் படிவங்கள் அல்லது பொதுமக்கள் புகார் மேலாண்மை அமைப்பு (SISPAA) மூலம் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தவறான தகவல்களைப் பரப்பும் முன் நிர்வாகத்திடம் முறையான விளக்கம் பெறுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ள நிர்வாகம், பயணிகளின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் MSSB நிறுவனம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.



