கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மலேசியக் சர்வதேச விமான நிலைய (KLIA) முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில், உள்ளூர் சந்தைக்காகக் கோக்கேன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற கும்பல் உட்பட ஆறு போதைப்பொருள் கடத்தல் கூட்டமைப்புகளைச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 4 முதல் நேற்று முன்தினம் வரை நடத்தப்பட்ட தொடர் நடவடிக்கைகளில், 22 முதல் 54 வயதிற்குட்பட்ட 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலப் போலிஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார், இன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், குறித்த சோதனைகளில் மொத்தம் 600.3 கிலோகிராம் எடை கொண்ட RM37.5 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கஞ்சா பூக்கள் (96.1kg), ஷாபு (408.6kg), ஹெரோயின் பேஸ் (87.9kg) மற்றும் கோகேன் (7.7kg) ஆகியவை அடங்கும் என்றார்.
மேலும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘டொயோட்டா ஹைலக்ஸ்’ (Toyota Hilux) மற்றும் ‘ஹோண்டா சிட்டி’ (Honda City) வாகனங்களுடன், RM2,704 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் , கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் சமூக வருகைப் பாஸ் (Social Visit Pass) மூலம் மலேசியாவிற்குள் நுழைந்து, போதைப்பொருள் ‘கேரியர்களாக’ (Drug Mules) செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று கூறினார்.
WhatsApp மற்றும் Telegram செயலிகள் வாயிலாக அதிக சம்பளம் தரும் வேலை தருவதாகக் கூறி இவர்களைத் தொடர்புகொண்ட நபர்கள், மலேசியாவிற்கு வரவழைத்து பிற நாடுகளுக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லுமாறு ஏமாற்றியுள்ளனர். KLIA விமான நிலையத்தில் ‘மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின்’ (MCBA) ஸ்கேனர் சோதனையின் போது, 39 வயது வெளிநாட்டவரின் பெட்டியிலிருந்து 7.7 கிலோ கோக்கேன் கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் மீது 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழும், இருவர் மீது குடிவரவுச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.



