‘இந்தப் படம் நல்லா இருக்காம்… டிக்கெட் போடு!’ என்று சொல்வதைத்தான் இதுவரை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சீனாவில் ஒரு படத்துக்கு நிலைமை அப்படியே தலைகீழ் ‘படம் படுமோசமாம்’… அப்படி என்னதான் மோசமாக இருக்கிறது என்று போய் பார்ப்போம்! என்று மக்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சீனாவில் வெளியாகியிருக்கும் ‘நியூ லாய்’ ல்(Niu Lai) என்ற அனிமேஷன் படத்துக்கு இப்போது நடப்பது அப்படியொரு விசித்திரமான சம்பவம்தான்! ஆகஸ்ட் 5-ம் தேதி சீனாவில் வெளியான இந்த 86 நிமிடப் படம், முதல் 10 நாள்களில் வெறும் 7,700 யுவான் மட்டுமே வசூலித்தது. இந்திய மதிப்பில் சுமார் ₹1 லட்சம்.
நாடு முழுவதும் 300-க்கும் குறைவானவர்களே படத்துக்கான டிக்கெட்டை வாங்கியிருந்தனர்.
படத்துக்கான புரோமஷன் இல்லை; முன்கூட்டிய விளம்பரம் இல்லை; ஏன், படத்துக்கான முன்னோட்டக் காட்சிகூட இல்லை; இப்படியொரு படத்தை யாராவது பார்த்திருக்கிறார்களா என்பதே கேள்வியாக இருந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் இணையத்தில் பரவத் தொடங்கின.
அவற்றைப் பார்த்த ரசிகர்கள், கதாபாத்திரங்களின் அசைவுகள், கணினி வரைகலை, குரல், நடிப்பு, கதை என படத்தின் பல அம்சங்களையும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
‘மாணவர் ஒருவர் செய்த பயிற்சிப் படம் போல இருக்கிறது’, ‘செயற்கை நுண்ணறிவைவிட மோசமாக இருக்கிறது’ என விமர்சனங்கள் பறந்தன.
2026-ம் ஆண்டின் மோசமான படமாகக்கூட இருக்கலாம் என்று சிலர் கிண்டல் செய்தனர். ஆனால், சினிமா வரலாற்றில் சில நேரங்களில் மோசமான விளம்பரமே நல்ல விளம்பரமாகிவிடும் அல்லவா?
‘அப்படியா… இவ்வளவு மோசமா? சரி, நாமே போய்ப் பார்த்துவிடுவோம்!’ என்ற ஆர்வம் மக்களுக்கு உருவானது.
அவ்வளவுதான். திரையரங்குகளில் கூட்டம் வர ஆரம்பித்தது!
Maoyan (மாயன்) திரைப்பட வசூல் தரவுகளின்படி, படம் தற்போது 1.49 கோடி யுவானைத் தாண்டிய வசூலை எட்டியுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ₹19–20 கோடி. முதல் 10 நாள்களில் வெறும் ₹1 லட்சம் அளவுக்குச் சுருண்டு கிடந்த படம், அடுத்தடுத்த நாள்களில் இப்படியொரு வேகத்தைப் பிடித்திருப்பதுதான் இங்கே ஹைலைட்!
இதனால், சீனத் திரையரங்க வசூல் பட்டியலில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘தி ஒடிஸி’, ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ உள்ளிட்ட படங்களுடன் ‘நியூ லாய்’யின் பெயரும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தின் இன்னொரு ஆச்சர்யம் அதன் உருவாக்கக் கதை.
‘நியூ லாய்’ படத்தை உருவாக்கியவர்கள் வெறும் இருவர் மட்டுமே. சின் யுமெங் மற்றும் சன் லிஃபாங் ஆகிய இருவரும் சுமார் ஐந்து ஆண்டுகள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். எழுத்து, இயக்கம், தயாரிப்பு, குரல் நடிப்பு என பல பொறுப்புகளையும் இவர்களே கவனித்துள்ளனர். இவர்கள் தாய்–மகன் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் கதை என்ன?
பிறந்து சில காலமே ஆன ஒரு கன்றுக்குட்டிக்கும், ஒரு வானம்பாடிக்கும் இடையிலான உறவைச் சுற்றி நகரும் கதை. அதுவும் வழக்கமான நேர்கோட்டுக் கதை அல்ல… கனவுபோன்ற, அபத்தமான காட்சிகளின் வழியாகப் பயணிக்கிறது.
