பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் போது உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதை விடுத்து, பிள்ளைகளின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்கும் முறைகளைப் பின்பற்றுமாறு சட்டத்தரணி சஜீவனி அபேகோன் வலியுறுத்தினார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கப் பணிப்பாளர், சட்டத்தரணி சஜீவனி அபேகோன் இது குறித்து தெரிவிக்கையில், வழக்கமாக ஒரு மாதத்துக்கு 600 முதல் 800 வரை பதிவாகும் முறைப்பாடுகள், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதில் பெரும்பாலான முறைப்பாடுகள் சிறுவர்களைக் கைவிடுதல் தொடர்பானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 4,950 முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 5,687ஆக அதிகரித்துள்ளது.
தற்போது பாடசாலைகள் விடுமுறை காலம் என்பதால், இந்த டிஜிட்டல் யுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் போது உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதை விடுத்து, பிள்ளைகளின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்கும் முறைகளைப் பின்பற்றுமாறு சட்டத்தரணி சஜீவனி அபேகோன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மேலதிக விழிப்புணர்வைப் பெற, அதிகார சபையின் மனநலப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ‘சிக்ஷா’ (Shiksa) என்ற புத்தகத்தைப் படிக்குமாறு அவர் பெற்றோரை ஊக்குவித்தார்.
சிறுவர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு 24 மணிநேரமும், மூன்று மொழிகளிலும் தொடர்புகொண்டு இரகசியமாகத் தெரிவிக்க முடியும்.
இந்த உயிர்நாடி சேவையை பொறுப்புடன் பயன்படுத்துமாறும், தவறான அல்லது போலி முறைப்பாடுகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


