PF பணம் வித்டிராவல்.. EPFO கொண்டு வந்த புது மாற்றங்கள்.. சாமானிய மக்களுக்கு பாதிப்பா? உண்மை என்ன..?
இந்திய ஊழியர்களின் பிஎப் கணக்கை நிர்வாகம் செய்யும் ஈபிஎப்ஓ அமைப்பு இக்கணக்கில் இருக்கும் தொகையை வித்டிரா செய்யும் முறையிலும், விதிகளிலும் பெரும் மாற்றத்தையும் செய்துள்ளது. இப்புதிய மாற்றங்கள் மூலம் மக்கள் இனி எளிதாக பணத்தை பெறுவது மட்டும் அல்லாமல் பல சிக்கல்களை நீக்கியுள்ளது.
இதன் மூலம் சாமானிய மக்கள் வேலைவாய்ப்பு இழப்பு, மருத்துவ செலவுகள், கல்வி, வீடு வாங்குவது, வீட்டுக் கடனை அடைப்பது போன்ற முக்கியமான விஷயங்களுக்கு எவ்விதமான தங்கு தடையுமின்றி 75 சதவீதம் வரையிலான தொகையை வித்டிரா செய்ய முடியும் என அறிவித்துள்ளது.

13 காரணங்கள்
ஈபிஎப் வெளியிட்டுள்ள புதிய விதிகள் படி, பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை வித்டிரா செய்ய முன்பு இருந்த 13 காரணங்களை 3 பிரிவாக அதாவது அடிப்படை தேவை, வீடு விவகாரம், தனிப்பட்ட சூழ்நிலை காரணங்கள் என வகைப்படுத்தியுள்ளது.
கால அளவு குறைப்பு
இதேபோல் பிப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஒருவர் 36 மாதம் பணியில் இருந்தாக வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் இந்த விதியை 12 மாதங்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
வித்டிராவல் எண்ணிக்கை
இதேபோல் கல்வி தொடர்பான காரணங்களுக்கு பணி வாழ்க்கையில் அதாவது மொத்த கரியரில் 10 முறை பணத்தை வித்டிரா செய்துக்கொள்ள முடியும். இதேபோல் திருமணம் தொடர்பாக 5 முறை வித்டிரா செய்துக்கொள்ள முடியும் என்ற புதிய விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
25 சதவீத தொகை முடக்கம்
முக்கியமாக ஒவ்வொரு பிஎப் கணக்கின் உரிமையாளும் 3 காரணங்களுக்காக பணத்தை திரும்ப எடுக்கும் போது 75 சதவீத தொகையை மட்டுமே வித்டிரா செய்ய முடியும், எஞ்சியுள்ள 25 சதவீத தொகை தொடர்ந்து முதலீடு செய்யப்பட்டே இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்த தொகையும் சேர்ப்பு
இதைவிட முக்கிய மாற்றமாக முன்பெல்லாம் பிஎப் கணக்கில் ஊழியர்கள் செலுத்திய தொகை + வட்டி தொகை மட்டுமே வித்டிரா செய்யக்கூடிய தொகையாக இருக்கும். ஆனால் தற்போது நிறுவனம் செலுத்திய தொகையும் வித்டிரா செய்யக்கூடிய லிமிட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது.
அதாவது பிஎப் கணக்கில் இருக்கும் அனைத்து தொகையும் வித்டிரா செய்யக்கூடிய தொகையாக மாறியுள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கியுள்ளது.
பணியை இழக்கும் போது
ஒருவர் தனது பணியை இழந்தால் முதல்கட்டமாக 75 சதவீத தொகையை பிஎப் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளலாம், ஆனால் எஞ்சியுள்ள 25 சதவீத தொகையை 12 மாதம் தொடர்ந்து பணியில் இல்லாமல் இருந்தால் மட்டுமே எடுக்க முடியும். முன்பு 2 மாதம் பணியில் இருந்தால் கூட மொத்த தொகையும் வித்டிரா செய்துக்கொள்ளக்கூடிய வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
3 பிரிவுகள்
அடிப்படை தேவை: மருத்துவம், கல்வி, திருமணம்
வீடு விவகாரம் : வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டை சரிபார்ப்பு, பராமரிப்பு, ஹோம் லோன் தொடர்பான விஷயங்கள்
தனிப்பட்ட சூழ்நிலை காரணங்கள்: இதர அனைத்து காரணங்களும் இதில் வகைப்படுத்தப்பட்டு, இதன் கீழ் அனைவரும் 75 சதவீத தொகையை வித்டிரா செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

