International
oi-Halley Karthik
பிரசல்ஸ்: பெல்ஜியத்தில் கட்டுமான பணியின் போது சுமார் 47 கி.கி தங்கம் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் ரூ.55 கோடி என தெரிய வந்திருக்கிறது.
கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, பெட்டி ஒன்று கிடைத்திருக்கிறது. பொதுவாக இப்படியான பெட்டிகள் கிடைத்தாலே அது பெரும்பாலும் தங்கமாகத்தான் இருக்கும். இருந்தாலும் சந்தேகத்தின் அடிப்படையில் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார்.

அதில் ஸ்டாம்ப் வைக்கப்பட்ட தங்க கட்டிகள், மற்றும் பழங்கால தங்க நாணயங்கள் இருந்திருக்கின்றன. மொத்த தங்கத்தின் எடை 47 கிலோ. மதிப்பு ரூ.55 கோடி. இந்த தங்கம் எங்கிருந்து வந்தது? யார் இந்த இடத்தில் புதைத்து வைத்தது? இதற்கு முன்னர் இந்த பகுதியில் வசித்தவர்கள் யார்? கண்டெடுக்கப்பட்ட தங்கம் எந்த காலத்தை சேர்ந்தது? என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மனியின் நாஜி படைகள் தாங்கள் படையெடுத்து சென்ற நாடுகளை மொத்தமாக துடைத்து எடுத்தன. அப்படி பெல்ஜியம் பக்கம் வரும்போது, நாஜி படைகளுக்கு பயந்து பணக்காரர்கள் யாராவது தங்கத்தை இப்படி புதைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
என்னதான் வீடு கட்டும்போது தங்கம் கிடைத்திருந்தாலும், அது முழுக்க அரசுக்கு சொந்தமானது என்றும், விரைவில் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
பெல்ஜியத்தில் இதற்கு முன்னர் இதேபோல பல இடங்களில் தங்க புதையல் கிடைத்திருக்கிறது. குறிப்பாக 2000 தொடக்கத்தில் கி.மு.1ம் நூற்றாண்டை சேர்ந்த கெல்டிக் தங்க நாணயங்கள் தமே எனும் நகரத்திற்கு அருகில் கிடைத்திருக்கிறது. அதற்கும் முன்பு, 19ம் நூற்றாண்டில் பவோடே பகுதியில் மிகவும் அரிய ரோமானிய தங்க நாணயங்கள் அடங்கிய பெரிய புதையல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

