கோலாலம்பூர்:
ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள ஜாலான் புக்கிட் கெமுனிங் பெட்ரோல் நிலையம் அருகே நடைபெற்ற கும்பல் மோதலில் 38 வயது நபர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டுப் படுகாயமடைந்தார்.
நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் இடது கையில் பலத்த காயமடைந்த அவர், தற்போது கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹீமா (HTAR) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இக்கலவரத்தில் ஈடுபட்ட கும்பல், கத்திகள் மற்றும் துப்பாக்கி போன்ற தோற்றமளிக்கும் பொருட்களைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. படுகாயமடைந்த நபர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டம் பிரிவு 148 (ஆயுதங்களுடன் கலகம் விளைவித்தல்) மற்றும் பிரிவு 326 (ஆபத்தான ஆயுதங்களால் படுகாயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 1960-ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டம் பிரிவு 8-ன் கீழ் (போலி அல்லது ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல்) விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், புலனாய்வு அதிகாரி உதவி சுப்ரிண்டண்டன்ட் ஷாம்சியா நூர் ஜகாரியாவை 012-8308706 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவுமாறு ஷா ஆலம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் சாருடின் சமா கேட்டுக்கொண்டுள்ளார்.



