1 இல்ல.. மொத்தம் 3 பேர்.. டாடா சன்ஸ் சேர்மன் பதவிக்கு கடும் போட்டி..? நோயல் டாடா போடும் ரகசிய திட்டம்!
டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு 3வது முறையாக தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என அறிவித்து, பதவி காலம் இன்னும் 6 மாதம் இருக்கும் வேளையில் என்.சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறிய நிலையில், டாடா குழுமம் விரைவாக புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டாடா குழுமத்தில் பல நிறுவனங்கள் முக்கிய கட்டத்தில் இருக்கும் காரணத்தால் முக்கியமான முடிவுகளை எடுக்க புதிய தலைவரை விரைவாக நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கான அவசரத்தை என்.சந்திரசேகரன் தனது ராஜினாமா கடிதத்திலும் குறிப்பிட்டு இருந்தார்.

டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டுமெனில் 5 பேர் கொண்டு குழு அமைக்க வேண்டும், இதில் டாடா டிரஸ்ட் சார்பில் 3 பேரும், டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இருந்து ஒருவரும், வெளியில் இருந்து ஒருவர் என மொத்தம் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட பின்பு தேர்வு நடைமுறைகள் நடைபெறும்.
டாடா சன்ஸ் சேர்மன் பதவியில் இதுவரையில் குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமே இருந்து வந்துள்ளனர். இதை முதல் முறையாக உடைத்து இப்பதவிக்கு பெரும் போட்டிக்கு மத்தியில் (நோயல் டாடா உடனான போட்டியில் வென்றவர் சந்திரசேகரன்) தேர்வானவர் சந்திரசேகரன். சந்திரசேகரன் முதல் முறையாக டாடா குடும்பம், பார்சி அல்லாத ஒருவராக இப்பதவிக்கு வந்தார்.
அப்போது ரத்தன் டாடா டிர்ஸ்ட் அமைப்பின் தலைவராக இருந்தார், தற்போது தலைவராக நோயல் டாடா இருக்கிறார். இதனால் முடிவுகள் மிகவும் மாறுப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது.
தற்போது சந்தையில் நிலவும் கருத்துக்கள் படி, டாடா சன்ஸ் சேர்மன் பதவிக்கு வருவதில் 3 பேர் போட்டிப்போடுகிறார்கள். இதைவிட முக்கியமாக ரத்தன் டாடா எடுத்த ஒரு முடிவு நோயல் டாடாவுக்கு பெரிய செக் ஆக அமைந்துள்ளது. இதனால் 4 முனை போட்டி 3 முனை போட்டியாக மாறியுள்ளது.
ரத்தன் டாடா, டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக இருந்த போது Article 118-ஐ ரத்து செய்தார். இதன் மூலம் டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ்-க்கும் ஒரே நபர் தலைவராக இருக்க முடியாது என்ற கட்டுப்பாடு வந்தது. இதனால் ரத்தன் டாடா போல் நோயல் டாடாவும் டாடா சன்ஸ், டாடா டிரஸ்ட் அமைப்புக்கு தலைவராக வர வேண்டுமாயின் அது முடியாது. இதனால் போட்டி 3 முனை போட்டியாக உள்ளது.
இதன் படி டாடா சன்ஸ் பதவிக்கு தற்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சிஇஓ – நிர்வாக இயக்குனராக இருக்கும் டிவி நரேந்திரன், டாடா குரூப் தலைமை நிதியியல் அதிகாரியான PB பாலாஜி, 3வது நபராக டாடா குடும்பத்தை சேர்ந்த, நோயல் டாடாவின் மகனான நெவில் டாடா-வும் இப்பதவிக்கு போட்டி போட்டு வருகிறார்.
நெவில் டாடா தற்போது டாடா குழுமத்தில் தற்போது மிகவும் வெற்றி பிராண்டாக இருக்கும் வெஸ்ட்சைட், Zudio போன்ற பிராண்டுகளை நிர்வாகம் செய்து வருகிறார். நெவில் டாடா மூலம் டாடா குழுமத்தின் ரீடைல் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் சில டிரஸ்ட்களில் டிரஸ்டி ஆகவும் இருக்கிறார்.
எனவே அனுபவம், நீண்ட கால டாடா குழுமத்தில் பணியாற்றியவர் என்ற முறையில் 61 வயதான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவரான டிவி நரேந்திரன் தான் சரியான தேர்வாக இருக்கும். ஆனால் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதால் நீண்ட கால அடிப்படையிலும், நிலையான நிர்வாகத்தையும் உருவாக்க 55 வயதான PB பாலாஜி தேர்வு செய்யப்படலாம்.
ஆனால் நோயல் டாடா, தனது குடும்ப உறுப்பினருக்கு தான் டாடா சன்ஸ் பதவியை கொடுக்க வேண்டும் என திட்டமிட்டால் 32 வயதான நெவில் டாடா-வுக்கு வழங்கலாம். ஆனால் தேர்வுக்குழு இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி.
ரத்தன் டாடா அவர்கள் டாடா சனஸ் சேர்மன் ஆக பதவியேற்கும் போது அவருக்கு வயது 53, ஆனால் நெவில் டாடாவுக்கும் வெறும் 33 வயது மட்டுமே. ஆனால் டாடா குழுமம் புதிய தொழில்நுட்பம், அடுத்த தலைமுறைக்கான வர்த்தகத்தை எட்டிப்பிடிப்பதில் முக்கிய பலமாக இருக்கிறார்.
இந்தியாவில் ஒவ்வொரு பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்திலும் அடுத்த தலைமுறையினர் நிர்வாகத்தை கையில் எடுக்கும் வேளையில் டாடா குழுமத்திலும் இது நடக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதேபோல் மீண்டும் டாடா குடும்பத்தை தாண்டி வெளி நபரை டாடா சன்ஸ் தலைவர் பதவியில் உட்கார வைத்தால் இதேபோன்ற பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முன்பு சைரஸ் மிஸ்திரி-க்கும் இதேபோன்ற பிரச்சனை ரத்தன் டாடா உடன் வெடித்தது, தற்போது சந்திரசேகரனுக்கு நோயல் டாடா வாயிலாக வந்துள்ளது.
இதனால் டாடா குழுமம் அடுத்த தலைமுறையை டார்கெட் வைத்து நெவில் டாடா-வை தேர்வு செய்யலாம், அல்லது தற்காலிகமாக டிவி நரேந்திரன்-ஐ டாடா சன்ஸ் தலைவராக நியமித்து அவர் பதவி காலம் முடிந்த பின்பு நெவில் டாடாவுக்கு இப்பதவி வரும் வகையில் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் சேர்க்கப்படலாம்.
முக்கியமான டிவிஸ்ட்
டாடா டிரஸ்ட் அமைப்பில் Sir Dorabji Tata Trust மற்ரும் Sir Ratan Tata Trust ஆகிய 2 அமைப்புகள் உள்ளது. இதில் Sir Ratan Tata Trust விதிகளை மீறி செயல்பட்ட காரணத்தால் மகாராஷ்டிரா சேரிட்டி கமிஷனர் இந்த அமைப்பு எவ்விதமான முடிவுகளை எடுக்க கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இதனால் தற்போது அமைக்கப்படும் புதிய அதிகாரிகள் தேர்வு குழுவில் குழுப்பம் உருவாகியுள்ளது.
இதை வாய்ப்பாக பயன்படுத்தி டாடா டிரஸ்ட் தலைவராக இருக்கும் நோயல் டாடா தற்காலிகமாக டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்படலாம். இதேபோல் நோயல் டாடா-வுக்கு 70 வயதாகும் காரணத்தால் டாடா குழுமத்தில் பிற நிறுவனங்களின் நிர்வாக குழுவில் இருந்து வெளியேற உள்ளார். இதனால் தற்காலிக டாடா சன்ஸ் தலைவராக வர வாய்ப்புள்ளது என்ற கருத்து நிலவுகிறது.
சைரஸ் மிஸ்திரியை நீக்கிய பின்பு ரத்தன் டாடா தனது 78 வயதில் தற்காலிக டாடா சன்ஸ் சேர்மன் ஆக வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது Article 118 நீக்கப்பட்டது நோயல் டாடா-வின் கனவுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

