கோலாலம்பூர்:
மதுபோதையில் வாகனம் ஓட்டி முதியவர் ஒருவரின் உயிரிழப்பிற்குக் காரணமான தனியார் கல்லூரி மாணவர் மீது தெலோக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பந்திங்கில் நடைபெற்ற இவ்விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், 23 வயதான என். விஷ்வேஷ் என்ற அம்மாணவர் இன்று புதன்கிழமை மாஜிஸ்திரேட் மாஸ்லிண்டா செலாமாட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டவை என்பதால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7:20 மணியளவில், ஜாலான் கிள்ளான்-பந்திங்-போர்ட்டிக்சன் சாலையின் 38 ஆவது கிலோ மிட்டர் பகுதியில், 78 வயதான எங் கிம் கெங் என்பவரைக் கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அரசுத் தரப்பில் துணை அரசுப் வழக்கறிஞர் முகமத் அமிருல் ஷாஃபிக் யாசித் ஆஜரானார். மாணவருக்குப் பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், இவ்வழக்கின் மறுவிசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, பந்திங் கஞ்சோங் பெங்கோக் போக்குவரத்துக் சமிக்ஞை சந்திப்பில் நடைபெற்ற இவ்விபத்தின் போது, அம்மாணவர் தான் மது அருந்தியிருப்பதை ஒப்புக்கொள்ளும் காணொளி இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



