சமீபத்தில் புக்கெட்–டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் உயர இழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு விமானியின் ஆரம்பகட்ட பரிசோதனையில் ‘non-negative’ முடிவு வந்ததை அடுத்து, இந்த கடுமையான நடைமுறைகள் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன.
ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், விமானிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு போதைப்பொருள் பரிசோதனையை (Drug Test) இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கட்டாயமாக்கியுள்ளது.
சமீபத்தில் புக்கெட்–டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் உயர இழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு விமானியின் ஆரம்பகட்ட பரிசோதனையில் ‘non-negative’ முடிவு வந்ததை அடுத்து, இந்த கடுமையான நடைமுறைகள் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன.
விமானப் பணியாளர்கள் மற்றும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர்களில் (ATC) ஆண்டுதோறும் 10 சதவீதம் பேர் சீரற்ற முறையில் (Random testing) தேர்வு செய்யப்பட்டு, இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பொதுவாக சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் முதற்கட்டமாக ‘screening test’ நடத்தப்படும்.
‘Non-negative’ முடிவு வந்தால் என்ன நடக்கும்?
ஆரம்பகட்ட பரிசோதனையில் ‘non-negative’ என முடிவு வந்தால், சம்பந்தப்பட்ட விமானி உடனடியாக பறக்கும் பணியில் இருந்து விலக்கப்படுவார். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே தவிர, அவர் குற்றவாளி என்று அர்த்தமல்ல; ஏனெனில் சில வலி நிவாரணிகள் அல்லது சளி, இருமல் மருந்துகள் கூட இத்தகைய முடிவை ஏற்படுத்தக்கூடும். இதை உறுதிப்படுத்த GC/MS அல்லது LC-MS போன்ற உயர் தொழில்நுட்ப முறைகள் மூலம் துல்லியமான உறுதிப்படுத்தும் பரிசோதனை (Confirmatory test) நடத்தப்படும்.
உறுதிப்படுத்தும் பரிசோதனையில் ‘positive’ என முடிவு வந்தால், மருத்துவ மறுஆய்வு அதிகாரி (MRO) அதை ஆய்வு செய்வார். அந்த முடிவு உண்மையான போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்பட்டதா அல்லது மருத்துவ சிகிச்சைக்காக எடுக்கப்பட்ட மருந்துகளால் ஏற்பட்டதா என்பதை அவர் தீர்மானிப்பார். எனவே, விமானிகள் புதிய மருந்துகளைப் பயன்படுத்தும் முன் நிறுவன மருத்துவரிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு:
முதல் முறை: போதைப்பொருள் பயன்பாடு உறுதியானால், அவர் மறுவாழ்வு (Rehabilitation) திட்டத்திற்கு அனுப்பப்படுவார். மீண்டும் பணிக்குத் திரும்ப புதிய பரிசோதனையில் ‘negative’ முடிவும், மருத்துவ சான்றிதழும் பெற வேண்டும்.
இரண்டாவது முறை: மீண்டும் சிக்கினால், விமான உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்படும்.
மூன்றாவது முறை: மூன்றாவது முறையும் தவறு நடந்தால், அவரது உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
மேலும், பரிசோதனைக்கு உட்பட மறுப்பதும் கடுமையான விதிமீறலாகக் கருதப்படுகிறது. விமானப் போக்குவரத்து துறையில் சிறிய தவறும் பெரிய விபரீதங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
