ஈப்போ:
பேராக் மாநிலம் லூமுட் கடற்பகுதி வழியாக நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 34 வெளிநாட்டினரை மலேசிய கடலோரக் காவல் படையும் (MMEA) பொது செயல்பாட்டுப் படையும் (GOF) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் கைது செய்துள்ளன.
சனிக்கிழமை தொடங்கப்பட்ட இந்தச் சிறப்புக் கூட்டு நடவடிக்கையில், சந்தேகத்திற்குரிய படகைக் கண்காணித்துக் தடுப்பதற்காக MMEA-வின் ‘KM Nusa’ மற்றும் ‘Bot Penggalang 1639’ ஆகிய ரோந்துப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டதாகப் பேராக் மாநில MMEA இயக்குநர் கெப்டன் முகமட் சுக்ரி கோதோப் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:20 மணியளவில் இந்தோனேசியாவிலிருந்து வந்த படகு ஒன்று இருளின் மறைவில் ‘தெலுக் ஃபிரிகி’ (Teluk Frigi) கடற்கரையை நோக்கிச் சென்றதை ரோந்துப் படை கண்டறிந்தது.
அமலாக்கப் படையினரைக் கண்டதும் படகு வேகமாகச் சென்று கரையை அடைந்தது. இருப்பினும், கடற்கரையில் தயார் நிலையில் இருந்த GOF தரைப்படையினர் காலை 5:00 மணியளவில் 34 பேரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 22 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடல் வழி எல்லைக் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுக்கத் தேசியப் பகுதிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் என MMEA உறுதியளித்துள்ளது.



