
கொத்மலை காமிணி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதால், நேற்று (09) மாலை 7.00 மணிக்கு அதன் ஒரு வான் கதவு (Spill gate) சிறியளவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மகாவலி அதிகாரசபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்க செயல்பாட்டுப் பிரிவின் கொத்மலை பொறுப்புப் பொறியாளர் தெரிவிக்கையில்,
குறித்த வான் கதவு திறக்கப்பட்டதன் மூலம் வினாடிக்கு சுமார் 20 கன மீற்றர் வேகத்தில் நீர் கொத்மலை ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாகக் குறிப்பிட்டார்.
நீர் திறந்து விடப்படுவதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையின் நீர் மட்டம் மிகச் சிறியளவில் உயரக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீர்த்தேக்கத்தின் கீழ் நதிப்பகுதியிலும், ஆற்றின் இருமருங்கிலும் வாழும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் மேலாண்மை மையம் (DMC) மற்றும் மகாவலி அதிகாரசபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளன.

