நாட்டின் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள போதிலும், அவை குறித்து முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அங்குணகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ, போகம்பரை, களுத்துறை, அனுராதபுரம், கொழும்பு மகசின், மொனராகலை, வட்டரக்க மற்றும் வாரியப்பொல ஆகிய 9 சிறைச்சாலைகளிலேயே இவ்வாறு 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.
பாதுகாப்பு உபகரணங்கள்
மேற்படி 9 சிறைச்சாலைகளிலும் உள்ள 191 துப்பாக்கிகள் பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் (Unserviceable) உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அத்தோடு 27 சிறைச்சாலைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 1,038 பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதால், சிறைச்சாலைகளில் அவற்றுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
9 சிறைச்சாலைகளில் இருந்த 62 துப்பாக்கிகள், 50 மெகசின்கள் (Magazines) மற்றும் 1,278 தோட்டாக்கள் பல்வேறு விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடுமையான தடைகள்
அவை ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் வரையிலான நீண்ட காலம் கடந்துள்ள போதிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவை முறையான நடைமுறைகளின் கீழ் மீண்டும் சிறைச்சாலை நிர்வாகத்தால் பொறுப்பேற்கப்படவில்லை.

இதனடிப்படையில் சிறைச்சாலைகளில் திடீரென வெடிக்கும் கலவரங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின் போது அவற்றை எதிர்கொள்வதில் சிறை அதிகாரிகளுக்குப் பாரிய நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் நீதிமன்றக் கடமைகள், விசேட மருத்துவமனைப் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளின் பொதுப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதில் கடுமையான தடைகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

