Last Updated:
போட்டிக்கு முன்பாக, ஹோட்டல் அறையில் வைத்து சக வீரர் ஒருவரிடம் பந்துவீச்சின் போது கூடுதல் ரன்களை விட்டுக்கொடுக்குமாறு அகிலேஷ் ரெட்டி வற்புறுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்பு விதியை மீறியதற்காக, அமெரிக்க நாட்டின் 26 வயதான கிரிக்கெட் வீரர் போடுகும் அகிலேஷ் ரெட்டிக்கு (Bodugum Akhilesh Reddy) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்ற 2025 அபுதாபி டி10 லீக் தொடரின் போது நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19, 2025 அன்று ‘ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ்’ அணியின் முதல் போட்டிக்கு முன்பாக, ஹோட்டல் அறையில் வைத்து சக வீரர் ஒருவரிடம் பந்துவீச்சின் போது கூடுதல் ரன்களை விட்டுக்கொடுக்குமாறு அகிலேஷ் ரெட்டி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அந்தச் சக வீரர் இந்தத் தவறான கோரிக்கையை நிராகரித்து, உடனடியாக ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவிடம் (ACU) புகார் அளித்துள்ளார். இதனால், போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக அந்த வீரர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தின் விசாரணையில் அகிலேஷ் ரெட்டி மீதான போட்டிகளின் முடிவுகள் அல்லது போக்கை தவறான வழியில் மாற்ற முயற்சித்து, மற்றொரு வீரரை சூதாட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டி, ஊக்குவித்தது, விசாரணைக்குத் தேவையான வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் அழைப்புப் பதிவுகளை மொபைலில் இருந்து திட்டமிட்டு நீக்கி விசாரணைக்கு இடையூறு விளைவித்தது ஆகிய மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது.
அகிலேஷ் ரெட்டிக்கு விதிக்கப்பட்ட இந்த 8 ஆண்டு காலத் தடை, அவர் முதன்முதலாக இடைநீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 21, 2025 முதல் அமலுக்கு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அமெரிக்க அணிக்காக 4 சர்வதேச டி20 (T20I) போட்டிகளில் விளையாடியுள்ள அகிலேஷ் ரெட்டி, 1 விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


