Last Updated:
ஆடும் லெவனில் இடம் பெற்று அறிமுகமானால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்
இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், காயத்தால் விலகியுள்ள முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 29 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி (Auqib Nabi) சேர்க்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் மேட்ச்களில் முன்னணி பந்துவீச்சாளரான ஆகிப் நபிக்கு இதுவே இந்தியத் தேசிய அணியில் இடம் பிடிக்கும் முதல் வாய்ப்பாகும். ஒருவேளை இவர் ஆடும் லெவனில் இடம் பெற்று அறிமுகமானால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.
2025-26 ரஞ்சி டிராபி தொடரில் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஜம்மு-காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி டிராபி சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல மிக முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். சமீபத்தில் இலங்கையில் நடந்த இந்தியா ஏ தொடரிலும் பங்கேற்று 2 முதல்தர போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
கடந்த மாதம் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பும்ராவின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால், அவர் இத்தொடரிலிருந்து முறைப்படி விலக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும், முதுகுக்காயம் காரணமாக ஆகாஷ் தீப்பும் அணியில் இடம்பெறவில்லை. மேலும், தொடைப் தசைப்பிடிப்பு காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நாளை புறப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் மற்றும் ஆகிப் நபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று கல்லே மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.


