India
oi-Vishnupriya R
விசாகப்பட்டினம்: நண்பர்கள் தினக் கொண்டாட்டத்தின் போது, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கங்காவரம் கடற்கரையில் பாறையின் மேல் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண் உள்பட இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காலை முதலே பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் வாழ்த்து மெசேஜ்கள் குவிந்த வண்ணம் இருந்தன. தொலைகாட்சிகளிலும் நட்பை போற்றும் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாய்ப்பிருக்கும் நண்பர்கள் சந்தித்துக் கொண்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 7 நண்பர்கள் பழைய கங்காவரம் கடற்கரைக்குச் சென்றனர்.
அப்போது அவர்கள் 7 பேரும் கடற்கரையில் உள்ள ஒரு பாறையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ஜாலியாக சிரித்து மகிழ்ந்தபடியே அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது அந்த கடல் அலைக்கு பொறுக்கவில்லை போல!
திடீரென மிகவும் வலிமையான பெரிய அலை அவர்கள் நின்றிருந்த பாறை அருகே வந்தது. அப்போது புகைப்படம் எடுப்பதில் மும்முரம் காட்டிய நண்பர்கள் இந்த அலையை கவனிக்காத நிலையில் 7 பேரில் 19 வயது இளம்பெண் அலையில் சிக்கி கீழே விழுந்தார். உடனே அவரை காப்பாற்ற 25 வயது இளைஞரும் தண்ணீரில் குதித்த நிலையில் இருவரையும் கடல் அலைகள் வாரி சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டன.
இதனால் நடப்பது என்னவென புரியாத அந்த நபர்கள் கதறி அழுதபடியே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த இருவரையும் தேடும் பணிகள் நடந்து வருகின்றன. அவர்கள் நின்றிருந்த பாறைக்கு பெயர் சுஸ்வாதகம் பாறையாகும். இங்கு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த சுஸ்வாதகம் படம் ஷூட்டிங் செய்யப்பட்டதால் அந்த பாறைக்கு அப்பெயர் சூட்டப்பட்டது.
இருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து தகவலறிந்த உள்ளூர் மீனவர்கள் அவர்களை தேடி வருகிறார்கள்.
இந்த பழைய கங்காவரம் கடற்கரையானது விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே அமைந்துள்ளது. இங்கு நிறைய பாறைகளுடன் இருக்கும் கடலின் இயற்கை அழகை ரசிக்க பலரும் செல்வதுண்டு.
அழகு இருக்கும் இடத்தில் உள்ள பாறைகள் மிகவும் ஆபத்தானவை. கடலின் சீற்றமும் பயங்கரமாக இருக்கும். கடற்கரையின் அடியில் இருந்து திடீர் திடீரென ஏற்படும் அதிக அழுத்தம் கொண்ட நீரோட்டங்கள் நம்மை வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும். இந்த கங்காவரம் கடற்கரை மிகவும் ஆபத்தான கடற்கரைகளில் மிகவும் ஒன்றாகும்.

