Business
oi-Vigneshkumar
டெல்லி: E20 எத்தனால் பெட்ரோல் திட்டம் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளது. அதாவது எத்தனால் கலப்பு கிட்டம் காரணமாக மக்களுக்கு லிட்டருக்கு ரூ.30 வரை சேமிக்கப்படுவதாக கூறியுள்ள மத்திய அரசு, இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மத்திய அரசின் E20 எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவசர கதியில் E20 பெட்ரோல் கொண்டு வந்துள்ளதால் பழைய வாகனங்களை வைத்திருப்போர் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இருப்பினும், மத்திய அரசு இதில் பின்வாங்குவதாக இல்லை.

கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த காலத்திலும், இந்தியாவில் பெட்ரோல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க இந்த திட்டமே காரணம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட விரிவான அறிக்கையில், “கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 135 அமெரிக்க டாலரை எட்டியபோது, முழுமையாக பெட்ரோலை மட்டும் இந்தியா நம்பியிருந்தால்.. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.125 வரை உயர்ந்திருக்கும்.
30 ரூபாய் சேமிப்பு
ஆனால், 20 சதவீத எத்தனால் கலவை (E20) திட்டம் நடைமுறையில் இருந்ததால், டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.94.77ஆகவே இருந்தது. இதன் மூலம் ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.30 வரை நுகர்வோருக்கு மறைமுக சேமிப்பு கிடைத்துள்ளது.. எத்தனால் கலப்பு பெட்ரோல் என்பது வெறும் மலிவான மாற்று எரிபொருள் மட்டுமல்ல.. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வில் இருந்து நாட்டை பாதுகாக்கும் ஒரு வகையான எரிசக்தி காப்பீடு என்றும் சொல்லலாம்” என்று கூறியுள்ளது.
எத்தனால் உற்பத்திக்காக மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியங்கள் திருப்பி விடப்படுகின்றன என்ற விமர்சனங்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. பொது விநியோகத் திட்டம், நலத்திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, கட்டாய கையிருப்பு தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பிறகே உபரி தானியங்கள் எத்தனால் உற்பத்திக்கு அனுமதிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
எத்தனால் கலப்பு
மேலும், மனிதர்களால் சாப்பிட முடியாத அளவுக்கு இருக்கும் சேதமடைந்த தானியங்கள், உடைந்த அரிசி மற்றும் உபரி உணவுத் தானியங்களே எத்தனால் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பிரதமர் JI-VAN திட்டத்தின் கீழ் விவசாய கழிவுகளில் இருந்து எத்தனால் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் உணவு தானியங்களை சார்ந்திருக்கும் நிலை மேலும் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு மேலும், “எத்தனால் உற்பத்தி என்பது ஒரே மூலப்பொருளை சார்ந்ததல்ல. அது பல்வேறு மூலப்பொருட்களின் அடிப்படையில் செயல்படும். பல ஆண்டுகளாக எத்தனால் தயாரிப்பில் சோளம் முக்கிய பங்களிப்பை வழங்கி வந்த நிலையில், 2025 ஆண்டில் உணவு பாதுகாப்பு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், இந்திய உணவு கழகத்தின் உபரி அரிசியும் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுகிறது.
இந்தியாவுக்கும் லாபம்!
இந்த திட்டத்தின் மூலம் இந்தியா இதுவரை ரூ.1.97 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நிய செலாவணியை சேமித்துள்ளது. 316 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதியை தவிர்த்துள்ளது.. மேலும், 950 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு மேல் கார்பன் எமிஷன் குறைக்கப்பட்டதுடன், விவசாயிகள் மற்றும் எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1.66 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது தனது கச்சா எண்ணெய் தேவையின் சுமார் 88 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருவதால், எத்தனால் கலவை திட்டம் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும். சர்வதேச எண்ணெய் திடீரென விலை ராக்கெட் வேகத்தில் ஏறம்போது அதில் இருந்தும் இந்தியாவை பாதுகாக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.




