Last Updated:
அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் மத்திய பங்கின் முதல் தவணையின் முன்கூட்டிய தொகையை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, மாநில பேரிடர் மீட்பு நிதியின் மத்தியப் பங்கிலிருந்து ரூ.2,117.85 கோடியை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். பருவமழை தொடங்கியதிலிருந்து, மத்திய அரசு, மாநில அரசுகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் வெள்ள நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேவைப்படும் இடங்களில், தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்களை முன்கூட்டியே பணியில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
சேதங்களை மதிப்பிடுவதற்காக அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. நாகாலாந்து அரசின் கோரிக்கையின் பேரில், அந்த மாநிலத்திற்கும் ஒரு மத்திய குழு செல்லவுள்ளது.
பாதிக்கப்பட்ட ஏழு மாநிலங்களில், இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் 2026-27 நிதியாண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியின் முதல் தவணையை ஏற்கெனவே பெற்றுள்ளன. நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதி சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் மத்திய பங்கின் இரண்டாவது தவணையை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும், பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களின் கீழ் ஆவணத் தேவைகளைத் தளர்த்தி, மாநில பேரிடர் நிவாரண நிதியின் மத்திய பங்கின் முதல் தவணையின் முன்கூட்டிய தொகையை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


