Tamilnadu
oi-Vishnupriya R
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே பைனான்ஸியர் வீட்டில் 50 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 29 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை ராகவேந்திரா நகர் கவிமணி காம்ப்ளக்ஸில் வசித்து வருபவர் மணிவண்ணன் (52). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி கவிதா (47) ஆகிய இருவரும் கடந்த 18ஆம் தேதி இரவு திருத்தணி கோவிலுக்கு சென்று அடுத்த நாள் காலை வீடு திரும்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 25ம் தேதி மனைவியிடம் மணிவண்ணன் தனக்கு மோதிரம் வேண்டும் எடுத்துக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் பணம் மற்றும் ஒன்றரை கிலோ அளவிலான வெள்ளி அப்படியே இருந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனி படையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டு போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
இதில் கவிதாவின் அண்ணனான மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் மனைவி ஜோதி (36) என்பவரும் மூக்கனூரை அடுத்த கள்ளியூர் வட்டம் பகுதி சேர்ந்த மகேந்திரன் மகன் மோகன் (28) என்பவரும் ஆகிய இருவரும் பைனான்சியரான மணிவண்ணனிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் மணிவண்ணனுடைய பீரோ சாவி ஒரு செட் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளது.
அந்த சாவி ஜோதிக்கு கிடைக்கப் பெற்றதால் அதனை வைத்து பீரோவில் உள்ள பணம் நகைகளை திருட திட்டம் தீட்டி உள்ளனர். அப்போது மணிவண்ணன் மற்றும் அவருடைய மனைவி கோயிலுக்கு சென்ற போது அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஜோதி தனது கள்ளக்காதலனான மோகனை வரவழைத்து வீட்டில் நுழைந்து பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 50 சவரன் நகையை திருடி சென்றதாக ஒப்புக் கொண்டனர்.
இந்த நிலையில் திருடி சென்ற நகையிலிருந்து 29 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மீதமுள்ள 21 சவரன் நகைகளை எங்கு வைத்தார்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சொந்த உறவினர் வீட்டிலேயே கள்ளக்காதலனை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.



