பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரின் வடக்குப் பகுதியில் உள்ள டிஜூகா (Tijuca) பகுதியில், மணிக்கு 100 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக சாலையோர மரம் ஒன்று திடீரெனச் சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் பாதசாரி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
பாதுகாப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, அந்த நபர் நடைபாதையில் நின்று சாலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். சில நொடிகளில் அவர் சற்று சாலையோரம் நகர்ந்தபோது, அருகிலிருந்த பெரிய மரம் திடீரெனச் சாய்ந்து மின்கம்பத்தையும் மோதி கீழே விழுந்துள்ளது.
மரம் மற்றும் மின்கம்பம் சரிந்தபோது, அதன் ஒரு பகுதி அந்த நபரைத் தாக்கியதாகக் காட்சிகளில் பதிவாகியுள்ளது. இருப்பினும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து சென்று, அவரை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இதன்போதும் பலத்த காற்று தொடர்ந்து வீசியதால் மரக்கிளைகள் ஆபத்தான முறையில் அசைந்துகொண்டே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

