தற்போது சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இந்த பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை (01) மாலை ஏற்பட்ட வன்முறை மற்றும் மோதல் சம்பவங்களில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் நலம் குறித்து விசாரிக்க அவர்களது உறவினர்கள் சிறைச்சாலைக்கு வந்திருந்த வேளையில் இந்தப் பதற்றமான சூழல் ஆரம்பமானது. இதன்போது சிறைச்சாலைக்கு உள்ளிருந்த கைதிகள் குழுவொன்று, கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மோதலின் போது, கைதிகள் அங்கிருந்த தற்காலிக கட்டுமானங்களை உடைத்து தப்பியோட முயற்சித்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறை அதிகாரிகள், சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்த பல கைதிகள், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த மோதலின் போது கைதிகள் குழுவொன்று, சிறைச்சாலைக் கட்டடத்துக்கு தீ வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இந்த பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை (STF), இராணுவம் மற்றும் கடற்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை அறிவதற்காக அவர்களது உறவினர்கள் சிறைச்சாலைக்கு வெளியேயும் ராகம வைத்தியசாலையிலும் திரண்டுள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிக்கையை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

