கோலாலம்பூர்:
தந்தையை இழந்து சரியாக ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கொடூரச் சாலை விபத்து ஒன்றில் தாயையும் இளைய தம்பியையும் பறிகொடுத்துப் பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் மூன்று உடன்பிறப்புகள்.
நேற்று, குவா மூசாங்-கோலக்கிராய் சாலையில் ‘குவா செஜுக்’ பகுதிக்கு அருகே நடைபெற்ற விபத்தில் 42 வயது மரியா யூசோஃப் மற்றும் அவரது 11 வயது இளைய மகன் முஹமட் ஜிக்கிர் இமான் அப்லி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்தது முதல், மரியா தனியாளாகப் போராடித் தனது 11 முதல் 21 வயது வரையிலான 4 பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில், கேமரன் ஹைலேண்ட்ஸ் பகுதிக்குச் சுற்றுலாச் சென்ற மரியா, நேற்று இரவு 9:00 மணியளவில் ஃபைசோலுக்கு ‘வீடியோ கால்’ மூலம் பேச முயன்றுள்ளார். ஆனால், ஃபைசோல் உறங்கிவிட்டதால் அவரது அழைப்பை எடுக்க முடியாமல் போயுள்ளது என்று, உயிரிழந்த மரியாவின் சகோதரர் முகமட் ஃபைசோல் யூசோஃப் கூறினார்.
விபத்தில் படுகாயமடைந்த மூத்த மகள் நூர் பால்கிஸ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும் தம்பியும் உயிரிழந்த செய்தி அவரிடம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இச்சுற்றுலாவில் கலந்துகொள்ளாத மற்ற இரு பிள்ளைகளுக்குத் தாய் மற்றும் தம்பியின் மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
நேற்று காலை 7:00 மணியளவில், இவர்கள் பயணித்த ‘பெருடுவா மைவி’ கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த்திசைப் பாதைக்கு விலகி எதிரே வந்த ‘ட்ரெய்லர் லோரி’ மீது மோதியதாக நம்பப்படுகிறது. இவ்விபத்தில் காரில் பயணித்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாயையும் தந்தையையும் இழந்து அனாதையாக நிற்கும் பிள்ளைகளைத் தானும் தனது குடும்பத்தினரும் பொறுப்பேற்றுப் பராமரிக்கவுள்ளதாக ஃபைசோல் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.



