Last Updated:
மேற்கு வங்கத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ. 28.5 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல்.
மேற்குவங்கம் மாநிலத்தின் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற நபரின் வீட்டில் இருந்து ரூ. 28.5 கோடி பணமும், சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கக் கட்டிகளையும் காவல்துறையினர் கைப்பற்றி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம், பிர்பும் மாவட்டத்தின் டியோச்சா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மினார் மண்டல். இவர் மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். மினார் மண்டல் கடந்த 2017ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று தற்போது மாதம் சுமார் ரூ. 35,000 ஓய்வூதியம் பெற்று வருகிறார்.
இந்நிலையில், மினார் மொண்டலின் உறவினரான துளு மொண்டல் என்ற முகமது நஜிபுதீன் மீது சட்டவிரோத கல், மணல் மற்றும் நிலக்கரி கடத்தல் உள்ளிட்ட புகார்கள் இருக்கின்றன. இந்தப் புகார் தொடர்பாக நஜிபுதீன் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பகுதியாகவே மினார் மண்டல் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில், மினார் மொண்டலுக்குச் சொந்தமான வீட்டில் இருந்து ரூ. 28.5 கோடி பணமும், சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கக் கட்டிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மினார் மொண்டலிடம் நடத்தப்பட்டுள்ள முதற்கட்ட விசாரணையில், அந்தப் பணமும் தங்கமும் தனக்குச் சொந்தமானவை அல்ல என்று அவர் கூறியதாக காவல்துறை தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், பணம் மற்றும் தங்கத்தை தனது மைத்துனரான முகமது நஜிபுதீன், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும் அவர் கூறியதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் சொல்லப்பட்டுள்ளது.
முகமது நஜிபுதீன் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்துவந்தநிலையில், தேர்தல் முடிவுக்கு பிறகு மம்தாவுக்கு எதிரான அணியில் இணைந்து செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், அவர் தொடர்புடைய வழக்கில் ரூ. 28.5 கோடி பணமும், சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jul 30, 2026 12:40 PM IST


