தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. காய் நகர்த்த துவங்கிய அமெரிக்கா.. இனி தான் திரில்லிங் ஆன நேரம்!
உலகம் முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் முடிவுகள் வெளியாகியிருக்கும் வேளையில் தங்கம் விலையில் புதிய டிவிஸ்ட் ஏற்பட்டு உள்ளது.
சந்தையின் கணிப்பின் படி கெவின் வார்ஷ் தலைமையிலான பெடரல் ரிசர்வ் இக்கூட்டத்தில் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடர முடிவு செய்துள்ளது, ஆனால் அடுத்த செப்டம்பர் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்காக வாய்ப்புகள் உள்ளதை பணிவீக்கம், வேலைவாய்ப்பு, நுகர்வு தரவுகள் உறுதி செய்துள்ளது.

பெடரல் ரிசர்வ்-ன் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் 3 பேர் வட்டி உயர்த்த பரிந்துரை செய்துள்ளனர், ஆனால் 9 பேர் இப்போது வட்டி உயர்வு வேண்டாம் என அறிவித்த காரணத்தால் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. இதன் விளைவு டாலர் மதிப்பிலும், தங்கம் விலையிலும் தடுமாற்றம், ஆனால் முதலீட்டாளர்கள் இந்த தடுமாற்றத்தை முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
டாலர் குறியீடான DXY நேற்றை வர்த்தகத்தில் 101.46 ஆக இருந்தது, ஆனால் இன்று காலை வர்த்தக துவக்கத்தில் 100.81 ஆக துவங்கி தற்போது Buy on Dip உக்தி அடிப்படையில் ஆசிய சந்தையில் முதலீடுகள் துவங்கி 100.92 வரையில் உயர்ந்துள்ளது.
இதன் தாக்கம் தங்க வர்த்தக சந்தையில் எதிரொலித்துள்ளது. அதாவது பெட் வட்டியை குறைக்காத நிலையில் தங்கம் விலை உயர வேண்டும், அதேபோல் டாலர் மதிப்பு குறைந்தாலும் தங்கம் விலை உயர வேண்டும். ஆனால் ஆசிய வர்த்தக சந்தை நேரத்தில் தொடர்ந்து டாலர் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதால் தங்கம் தனது பொழிவை இழந்துள்ளது.
ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 0.31 சதவீதம் குறைந்து 4,054.31 டாலராகவே உள்ளது, பெட் முடிவுகளுக்கு பின்பு 4100 டாலருக்கு மேல் வர்த்தகமான தங்கம் இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகத்தில் சரிய துவங்கியுள்ளது.
டாலர் வலிமை பெறும் பட்சத்தில் தங்கம் விலை சரிய துவங்கும். இந்திய ரீடைல் சந்தையில் நேற்றைய பெட் முடிவுகளின் தாக்கம் மட்டுமே எதிரொலித்துள்ளது, இதன் விளைவாக இன்று காலை சென்னை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 82 ரூபாய் உயர்ந்து 14,433 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் விலை 75 ரூபாய் உயர்ந்து 13,230 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 235 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 2,35,000 ரூபாயாகவும் உள்ளது. பிளாட்டினம் விலை 7 ரூபாய் மட்டும் குறைந்து 4884 ரூபாயாக உள்ளது. தற்போது சர்வதேச சந்தையின் தாக்கம் மாலை வர்த்தகத்திலோ அல்லது நாளை எதிரொலிக்கும்.
அமெரிக்கா – ஈரான் போர் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் உயர்வு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வு திட்டத்தை தொடர்ந்து உயிர்ப்புடனே வைத்துள்ளது.
குறிப்பாக வளைகுடா நாடுகள் தற்போது ஈரான், ஈராக், ஒமான் என 3 பகுதிகளில் இருந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் போர் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதேவேளையில் ஈரான் கப்பல்களை காஸ்பியன் கடலில் உக்ரைன் படைகள் சுட்டுவீழ்த்தியது மூலம் போரின் தீவிரம் அதிகரித்து உக்ரைனும் இப்போரில் நுழைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதோடு இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
