Last Updated:
2018-ஆம் ஆண்டு முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையில், குடிநீர் தேவைக்கு என்று கூறியதால் மட்டுமே கொள்கை அளவில் அனுமதி அளிகப்பட்டது.
கர்நாடக அரசு தாக்கல் செய்ய மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு எல்லையை ஒட்டியிருக்கும் மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டி, கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதியே கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளது.
2018-ஆம் ஆண்டு முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையில், குடிநீர் தேவைக்கு என்று கூறியதால் மட்டுமே கொள்கை அளவில் அனுமதி அளிகப்பட்டதாகவும், ஆனால், அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் சிவனசமுத்திரம் நீர்மின் திட்டத்தை சேர்த்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், பெங்களூரு நகரின் தற்போதைய நீர்த்தேவை என்ன என்ற உண்மையான விவரங்களை தவிர்த்து, பழைய புள்ளிவிவரங்களை கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளதாகவும், தற்போது காவிரியில் இருந்து எவ்வளவு நீரை கர்நாடகா பயன்படுத்துகிறது என்ற விவரங்களையும் தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேகதாதுவில் 60 டிம்.எம்.சி. தண்ணீரை தேக்கி வைப்பதற்கான காரணம் சரியாக இல்லை என குறிப்பிட்டுள்ள மத்திய நீர்வள ஆணையம் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.


