தட்கல் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்: பயணிகளே ஆகஸ்ட் 1 முதல் புதிய முறை அமல்..!!
தட்கல் டிக்கெட் முன்பதிவில் இந்திய ரயில்வே அவ்வப்போது மேஜர் மாற்றங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் தான் தட்கல் டிக்கெட் பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவித்தது. இந்த சூழலில் தற்போது டோக்கன் என்ற புதிய முறையை கொண்டு வந்துள்ளது.
தட்கல் டிக்கெட்டுகள் ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள் முன்பதிவு செய்யக்கூடிய டிக்கெட்டுகள். இதனை ஆன்லைனிலும் பெறலாம் நேரடியாக ரயில் டிக்கெட் கவுண்ட்டர்களுக்கும் சென்று பெறலாம். அந்த வகையில் ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக ஒரு முக்கியமான மாற்றம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தட்கல் டிக்கெட்டுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் அவலம் நீக்கப்பட்டு, முன்பதிவு முறை மிகவும் சீரானதாக மாற்றப்பட உள்ளது. வழக்கமாக தட்கல் டிக்கெட் எடுப்பதற்காக பயணிகள் அதிகாலையிலேயே ரயில் நிலையங்களுக்கு சென்று மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும். இதனை தவிர்க்கவும், கூட்ட நெரிசலை குறைக்கவும், முறையான டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் டிக்கெட் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்படி ஏசி வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கு காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும். ஏசி அல்லாத வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கு காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும். முதல் ஒவ்வொரு கவுண்ட்டரிலும் ஏசி வகுப்பிற்கு 10 டோக்கன்கள், ஏசி அல்லாத வகுப்பிற்கு 15 டோக்கன்கள் என வழங்கப்பட உள்ளது. தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை மாற்றப்படலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக டோக்கன்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் வகை A (Category A) என்பது குடும்பத்தினருக்காக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கானது. இதைப் பெற, விண்ணப்பதாரர் தனது அடையாள அட்டையுடன், பயணிக்க இருக்கும் குடும்ப உறுப்பினரின் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும். வகை B (Category B), இதில் தனி நபர்கள் அல்லது குடும்பம் அல்லாத பிற பயணிகளுக்கு இந்த டோக்கன் வழங்கப்படும்.
இந்த டோக்கன்கள் மாற்ற முடியாதவை என சொல்லப்படுகிறது. அதாவது, ஒருவருக்கு வழங்கப்பட்ட டோக்கனை மற்றொருவர் பயன்படுத்த முடியாது. டோக்கன் பெற்று கொண்ட பயணிகள் டிக்கெட் முன்பதிவு நேரத்தின் போது கவுண்ட்டருக்கு வந்தால் போதும். முதலில் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இது அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
டோக்கன் பெற்ற அனைவரும் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு, ஒருவேளை தட்கல் ஒதுக்கீட்டில் இடங்கள் மீதமிருந்தால், அவை டோக்கன் இல்லாத பொதுவான பயணிகளுக்கு முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
இந்த புதிய நடைமுறை ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் நிலவும் குழப்பத்தை தடுத்து, பயணிகளுக்கு ஒரு வெளிப்படையான மற்றும் அமைதியான முன்பதிவு அனுபவத்தை வழங்கும் என ரயில்வே அதிகாரிகள் நம்புகின்றனர்.

