அவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழாவது அல்லது எட்டாவது நாளில், மியான்மரைச் சேர்ந்த ஒரு குழுவினர் இவர்களது படகில் ஏறி பைனாகுலர் மற்றும் கெமரா உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து மீன்பிடிக்கச் சென்று இயந்திரக் கோளாறு காரணமாக 36 நாட்கள் கடலில் தத்தளித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர், பங்களாதேஷ் கடல்பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர்.
தேவிநுவரையைச் சேர்ந்த எஸ்.எச். சமிந்த (S.H. Chaminda) மற்றும் அவரது மகனான சௌந்த ஹன்னடிகே பியவதிங் (Saunda Hannadigipiyawating) ஆகியோரே இவ்வாறு மீட்கப்பட்டவர்களாவர்.
பங்களாதேஷின் காக்ஸ் பஜார், மகேஷ்காலி பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்களால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து 04 மீனவர்கள் ஒரு படகில் புறப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ஏனைய இரு மீனவர்கள் வேறொரு படகின் உதவியுடன் இலங்கை திரும்பினர்.
இருப்பினும், அந்தப் படகு தங்களுக்குச் சொந்தமானது என்பதால் தந்தையும் மகனும் அதிலேயே தங்கியிருக்க முடிவு செய்தனர்.
கடலில் தத்தளிக்கத் தொடங்கி 07 நாட்களுக்குப் பிறகு அவர்களது உணவு இருப்பு முழுமையாகத் தீர்ந்துவிட்டது. இதனால், அடுத்த 29 நாட்களுக்கு அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தும் தூண்டில் புழுக்கள் மற்றும் கடலில் பிடித்த பச்சை மீன்களை உண்டு, உயிர் பிழைத்துள்ளனர்.
அவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழாவது அல்லது எட்டாவது நாளில், மியான்மரைச் சேர்ந்த ஒரு குழுவினர் இவர்களது படகில் ஏறி பைனாகுலர் மற்றும் கெமரா உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
வங்காளதேச மீனவர்களால் மீட்கப்படும் போது, இருவரில் ஒருவர் மிகவும் மோசமான உடல் நிலையில் காணப்பட்டார். தற்போது அவர்கள் மகேஷ்காலி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தங்களை விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அவ்விருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

