கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவில் முக்கிய அரசியல் மற்றும் அரசு அறிவிப்புகள் என்றால் அவை வழக்கமாக இரவு 8:00 அல்லது 8:30 மணிக்குத் தொலைக்காட்சிகள் வழியாகவே முறைப்படி ஒளிபரப்பப்பட்டு வந்தன.
2016-ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு மற்றும் கோவிட்-19 காலகட்ட உரைகள் போன்றவை இத்தகைய அதிகாரப்பூர்வ ஸ்டுடியோ அமைப்பிலேயே நாட்டின் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்தன. இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் மற்றும் தகவல்தொடர்பு முறைகள் முற்றிலும் மாறுபட்டுள்ளன.
இன்றைய அரசியல் மற்றும் சமூக உத்திகளில் முக்கியப் பங்கு வகிக்கும் இளைய தலைமுறையினர் (‘Gen Z’), தொலைக்காட்சி நேரலைகளைப் பார்ப்பதை விட, சமூக வலைதளங்களில் 15 வினாடி வெர்டிகல் வீடியோக்கள், ரீல்ஸ்கள் மற்றும் அல்காரிதம் சார்ந்த குறுகிய வீடியோ வடிவங்களையே அதிகம் விரும்புகின்றனர். இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டதன் விளைவாகவே, பிரதமர் மோடியின் உரையாடல் ஸ்டைலிலும் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், வியாழக்கிழமை நள்ளிரவு 11:52 மணிக்கு, பிரதமர் தனது ஸ்மார்ட்போனின் ஃப்ரன்ட் கேமராவைப் பயன்படுத்தி, 3 நிமிடங்களுக்கும் குறைவான ஒரு செல்ஃபி ஸ்டைல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். முறையான ஸ்டுடியோ ஒளிபரப்புகளைத் தவிர்த்து, கையில் போனைப் பிடித்துக்கொண்டு நேரடியாகப் பேசும் இந்த வடிவம், இளைஞர்களிடையே குறிப்பாக ஜென் ஸிக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஜந்தர் மந்தரில் ‘நீட்’ (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் போன்ற சம்பவங்கள், சோஷியல் மீடியாக்களின் ட்ரெண்டிங் ஆடியோக்கள் மற்றும் வைரல் வீடியோக்கள் மூலமாகவே வேகமெடுத்தன. இதுபோன்ற சூழலில், அதே தளங்களில் நேரடியாகப் பேசுவது இளைஞர்களை உடனடியாகச் சென்றடைய உதவுகிறது.
வழக்கமான ஸ்டுடியோ பதிவுகள் பல நேரங்களில் விளம்பர உத்தியாகப் பார்க்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், முகத்திற்கு அருகில் வைத்துப் பேசப்படும் ‘ஃபேஸ்டைம்’ (FaceTime) போன்ற செல்ஃபி வீடியோக்கள், ஒரு தலைவருடன் நேரடியாகப் பேசுவது போன்ற உணர்வை இன்ஸ்டாகிராமின் ‘ஃபார் யூ’ (For You) பக்கங்களில் உருவாக்குகின்றன.
இளைஞர்கள் இரவு நேரங்களில் சோஷியல் மீடியாவை அதிகம் பயன்படுத்தும் நேரத்தைக் கணித்து, நள்ளிரவில் வீடியோவை வெளியிடுவதன் மூலம், அடுத்த நாள் காலை செய்திச் சுழற்சி தொடங்குவதற்கு முன்பே அதிக அளவிலான பார்வைகளையும் கவனத்தையும் பெற முடிகிறது.
இந்த தகவல்களின் அடிப்படையில் பிரதமர் நரேந்தி மோடி, Gen Z இளைஞர்களையும் அதிகம் கவர்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
