இதற்கிடையே வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், “மருத்துவர்களின் அறிவுரைப்படி சோனம் ஜி கூடிய விரைவில் தனது பழைய உடல் எடையை மீண்டும் பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட சோனம் வாங்சுகிற்கு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே நன்றி தெரிவித்துள்ளார். எனினும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் சிஜேபியின் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் கடந்த 34 நாட்களாகப் போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் ஜந்தர் மந்தரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் நிலவியது.
Just now in the presence of Union Ministers Sh. JP Nadda, Dr. Jitendra Singh and the senior leaders of Apex Body of Leh Ladakh I finally broke my fast after 26 days. Earlier 65 members of parliament from different political parties had visited or signed letters urging me to break… pic.twitter.com/RFCet7Oksy
— Sonam Wangchuk (@Wangchuk66) July 23, 2026
அதைத்தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவியத் தொடங்கினர். ஜந்தர் மந்தரில் இருந்து கன்னாட் பிளேஸ் வரையில் போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். இதனால், துணை ராணுவப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போராட்டக் களத்தில் இளைஞர்கள் மத்தியில் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே, நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை திட்டவட்டமாக நிராகரித்தார். இந்த போராட்டத்தை அங்கீகரிக்க பிரதமருக்கு 34 நாட்கள் ஆகியுள்ளதாகவும் அவர் சாடினார்.
இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், ஜந்தர் மந்தர், சன்சத் மார்க், மத்திய டெல்லியின் பல பகுதிகளில் நேற்று இணைய சேவை துண்டிக்கப்பட்டது. கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் நேற்று மாலை மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக் படேல் சவுக், ஜன்பாத், மண்டி ஹவுஸ், இந்தியா கேட், சிவாஜி மைதானம் உள்ளிட்ட 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி உறுதியளித்தபடி, பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிப்பதற்காக, டெல்லி உயர் நீதிமன்றம் விரைவு நீதிமன்றத்தை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெறவுள்ள சிறப்பு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கையும் சீர்திருத்தங்களும் மேற்கொள்வது குறித்து அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மேலும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த வினீத் ஜோசியை பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உயர்கல்வித்துறை செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

