கோலாலம்பூர்:
மலாய் மக்களின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தங்களின் சொத்துகளைப் பகிரங்கமாக அறிவித்து, அதில் பாதியை மலாய் சமூகத்திற்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் எனத் தாம் விட்ட சவாலுக்கு இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார்.


செனாவாங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சாமானிய மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் வேளையில், தங்களைச் சமூகக் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் சிலர் பில்லியன் கணக்கில் சட்டவிரோதமாகச் செல்வத்தைச் சேர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.


மறைந்த முன்னாள் அமைச்சர்கள் சிலரின் சொத்து மதிப்புகளைக் குறிப்பிட்ட அவர், தாம் வீண் பழி சுமத்தவில்லை என்றும், தேவைப்பட்டால் இதற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார் என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார்.


மேலும், ஊழல் மற்றும் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



