Tamilnadu
oi-Nantha Kumar R
தூத்துக்குடி: ”நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. ஜெயில் நல்ல சவுகரியமாக இருக்கு” என்று விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் தனது ஆதரவாளர்களிடம் கூறிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருப்பவர் மார்கண்டேயன். இவர் கடந்த 2021ம் ஆண்டில் முதல் முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் 2வது முறையாக வாகை சூடினார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் மார்கண்டேயன் எம்எல்ஏ சர்ச்சையில் சிக்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்கண்டேயன் எம்எல்ஏ ஒருமையில் முதல்வர் விஜய்யை விமர்சனம் செய்ததோடு மிரட்டலும் விடுத்தார்.
மார்கண்டேயன் எம்எல்ஏ பேசிம்போது, ”தமிழ்நாட்டின் முதல் அமைச்சரே னுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டு தான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை” என்று பேசியிருந்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்கண்டேயன் எம்எல்ஏவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மார்கண்டேயன் எம்எல்ஏ திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் ஜாமீன் கோரி மாக்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேபோல் மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி சுமதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கிற்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மார்கண்டேயனை போலீசார் அழைத்து வந்திருந்தனர். இருமனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து மார்கண்டேயன் எம்எல்ஏவை போலீசார் மீண்டும் காவல் வாகனத்தில் ஏற்றி சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வேளையில் காவல் வாகனத்தில் இருந்தபடி மார்கண்டேயன் தனது ஆதரவாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ”நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்ல ஜெயில் நல்ல சவுரியமாக இருக்கு. உள்ளே 25 புத்தகம் வைத்திருக்கிறேன். எல்லாம் நல்லா இருக்கிறது.நீங்கள் ஹேப்பியா இருங்க. எத்தனை நாள் உள்ளே இருக்கிறோமோ அவ்வளவு விரைவாக ஆட்சிக்கு வருகிறோம். எல்லோரும் ஹேப்பியா இருங்க” என்று கூறினார்.

