Last Updated:
2027 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு, வீரர்களின் பணிச்சுமை (Workload) மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்துவதில் பிசிசிஐ தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உட்பட பல முக்கிய சர்வதேசக் கிரிக்கெட் தொடர்கள் நெருங்கி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயங்களாலும் உடற்தகுதிப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் உயர்மட்ட மையமான Centre of Excellence (CoE) மையத்தில் வீரர்கள் பலர் முகாமிட்டு சிகிச்சை மற்றும் உடற்தகுதிப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் ஏற்கனவே CoE மையத்தில் இருந்து தீவிர கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்களும் விரைவில் இந்த மையத்தில் இணையவுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்படும் முன், அனைத்து வீரர்களின் உடற்தகுதியும் தீவிரமாகப் பரிசோதிக்கப்படும். வீரர்களின் முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்ற பிறகே, தேர்வுக்குழுவினர் இலங்கை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வார்கள் எனப் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2027 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு, வீரர்களின் பணிச்சுமை (Workload) மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்துவதில் பிசிசிஐ தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கை டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வங்கதேசப் பயணம் மற்றும் நியூசிலாந்து தொடர் என அடுத்தடுத்து தொடர்கள் நடைபெறவுள்ளன.
எனவே, அனைத்து விதமான போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் வகையில் வலுவான மாற்று வீரர்களை கொண்ட அணியை உருவாக்க நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. காயப் பிரச்சனைகள் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.


