Last Updated:
ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதலில், 10 பேர் பலியான நிலையில் அவர்களில் 4 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் சரக்கு கப்பல் மீது ரஷ்யாவால் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் நிலவிவரும் நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைனின் ஒடேசா நகரில் இருந்து சோளம் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சரக்கு கப்பலான எம்.வி கோல்டன் லியோ மீது ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியான நிலையில் அவர்களில் 4 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்த வகையான தாக்குதல் கப்பல் போக்குவரத்தையே தடைசெய்யும் வகையிலான ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு கப்பல் மற்றும் அதில் பயணிக்கும் மாலுமிகள் மீதான இவ்வகை தாக்குதல் வருந்தத்தக்க ஒன்று எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

