2008 நிதி நெருக்கடியை கணித்த நூரியல் ரூபினி.. இதையும் சொல்லிட்டார்.. வேலைக்கு இனி உத்தரவாதமில்லை..!
டாக்டர் டூம் என அழைக்கப்படும் நூரியல் ரூபினி 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடியை சரியாக கணித்த முக்கியமான பொருளாதார அறிஞர் ஆவார், இவர் தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சந்தையில் நடக்கப்போகும் மாற்றம் குறித்து முக்கியமான கணிப்பை வெளியிட்டு மீண்டும் பலரையும் கலங்கடித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல முக்கிய தாக்கங்கள் ஏற்பட்டு வரும் இதே வேளையில் சந்தையில் சில கவனிக்க வேண்டிய மாற்றங்கள் நடக்கப்போகிறது என கூறியுள்ளார் நூரியல் ரூபினி. சமீபத்தில் இவர் ப்ளூம்பெர்க் தளத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவின் சோஷியல் செக்யூரிட்டி டிர்ஸ்ட் பண்ட் 2032 ஆம் ஆண்டில் பணமில்லாமல் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சோஷியல் செக்யூரிட்டி டிர்ஸ்ட் பண்ட் என்பது அமெரிக்காவில் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும், இதற்கான நிதியை அந்நாட்டில் இருக்கும் ஊழியர்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து வரி மூலம் வசூலிக்கப்படுகிறது.
இக்கணக்கில் இருக்கும் நிதியையும், அதன் பயனாளிகளும் தொடர்ந்து உதவிகளை பெற அமெரிக்க அரசு ஒய்வு பெறும் வயதை அதிகரித்தால் போதும் என நம்புகிறது, ஆனால் அது மிகப்பெரிய தவறு என நூரியல் ரூபினி தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் மூலம் அடுத்த 20-30 ஆண்டுகளில் பெரும் பகுதி வேலைவாய்ப்புகள் குறையும், இது சேவை துறையை தாண்டி உற்பத்தி துறையிலும் நடக்கும் என்பதால் இது மொத்த வேலைவாய்ப்பு சந்தையை புரட்டிப்போடக்கூடியதாக இருக்கும்.
இதனால் வேலைவாய்ப்புகளும், இதன் மூலம் சோஷியல் செக்யூரிட்டி டிர்ஸ்ட் பண்டுக்கு வரும் தொகையும் மெல்ல மெல்ல குறைந்து நிதி நெருக்கடி உருவாகும். இதனால் அரசும், நிறுவனங்கும் மாற்று சிந்தனையுடன் புதிய கொள்கையை உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் என அறிவித்துள்ளார் நூரியல் ரூபினி.
அதாவது பொருளாதாரத்திலும், மக்கள் மத்தியிலும் சமநிலையை உருவாக்க universal basic income கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மக்கள் பணியில் இருக்கும் போதும் சரி, ஓய்வு பெற்ற பின்பும் சரி நிலையான வருமானத்தை அளிக்கும்.
இதற்கான ஆலோசனைகளும், திட்டமிடலும் ஏற்கனவே துவங்கியுள்ளது என்றும் ரூபினி தெரிவித்தார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன், எலான் மஸ்க் போன்ற பலர் இதுக்குறித்து பேசுவதுமட்டும் அல்லாமல் இதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்கான திட்டமிடலையும் அளித்து வருகின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து தற்போது பிரிட்டனும் இதுக்குறித்த ஆய்வில் இறங்கியுள்ளது.
இதேவேளையில் செயற்கை நுண்ணறிவு மூலம் மனித வரலாற்றில் இதுவரையில் பார்க்காத வளர்ச்சியை காணப்போகிறோம், ஏஐ தாண்டி AGI பெரிய தாக்கத்தை உருவாக்கப்போகிறது. ஏஜிஐ மனிதனர்களுக்கு இணையாக அல்லது மனிதர்களை விடவும் சிறப்பாக பணியாற்றும் திறன் கொண்டதாக இருக்கும்.
இதன் மூலம் தற்போது இருக்கும் 2-4 சதவீதம் வளர்ச்சி அடையும் அமெரிக்க பொருளாதாரம் 2040ல் 6 சதவீதமாகவும், 2050ல் 10 சதவீதம் அளவில் வருடாந்திர அளவில் வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார் ரூபினி.

