இந்த விலை உயர்வுக்கு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இன்று திங்கட்கிழமை (20) முதல் முட்டை விலைகள் உயரும் என்றும், வெள்ளை முட்டை ஒன்றின் சில்லறை விலை ரூ. 41ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ. 42ஆகவும் உயரும் என்றும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, குளியாபிட்டியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த விலை உயர்வுக்கு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மக்காச்சோள இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டதால் கோழித் தீவனத்துக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் முட்டைத் தொழிலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளூர் மக்காச்சோள உற்பத்தி போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.
“உற்பத்தியாளர்கள் அரிசி உள்ளிட்ட மாற்றுத் தீவனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது கோழிகளின் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் மோசமாகப் பாதித்துள்ளது. இதன் விளைவாக முட்டை உற்பத்தியில் 20 முதல் 30 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது” என்றும் சரத் ரத்நாயக்க கூறினார்.
மேலும், சில நேர்மையற்ற வியாபாரிகள் கால்நடைத் தீவனத்தில் இரசாயனங்களையும் மருந்துகளையும் கலந்துள்ளதால், ஏராளமான கோழிகள் இறப்பதற்கும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

