Last Updated:
மண்புழு உரத்தை ஒரு ஏக்கருக்கு 2 டன் பயன்படுத்தினால் மண் வளம் அதிகரித்து, பயிர் மகசூல் உயர்வதுடன் சாகுபடி செலவும் குறையும் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை விவசாயத்தில் மண் வளத்தையும், பயிர் மகசூலையும் அதிகரிக்க மண்புழு உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 2 டன் மண்புழு உரம் பயன்படுத்தினால், நிலத்தின் வளம் மேம்பட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை தரக் கட்டுப்பாட்டு அலுவலர் மதியழகன் தெரிவித்துள்ளார்.
மண்புழு உரம் என்பது சமையல் கழிவுகள், உலர்ந்த இலைகள், மக்கிய கால்நடை சாணம் உள்ளிட்ட கரிமக் கழிவுகளை மண்புழுக்களின் உதவியுடன் சிதைவடையச் செய்து தயாரிக்கப்படும் சிறந்த இயற்கை உரமாகும். இது மண்ணின் கரிமச் சத்துக்களை அதிகரித்து, நீரை தக்கவைக்கும் திறனை மேம்படுத்துவதோடு, பயிர்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
மண்புழு உரத்தை தயாரிப்பது மிகவும் எளிதானது. நிழலான இடத்தில் தொட்டி அல்லது குழி அமைத்து, அதில் உலர்ந்த இலைகள், மக்கிய மாட்டுச்சாணம் மற்றும் பிற கரிமக் கழிவுகளை அடுக்கி, மண்புழுக்களை விட வேண்டும். தேவையான ஈரப்பதத்தை பராமரித்து, நேரடி வெயில் படாமல் பாதுகாத்தால், 45 முதல் 60 நாட்களுக்குள் தரமான மண்புழு உரம் தயாராகிவிடும்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை தரக் கட்டுப்பாட்டு அலுவலர் மதியழகன் கூறுகையில், “விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் சாகுபடி செலவை குறைத்து, வருமானத்தை அதிகரிக்க முடியும். குறிப்பாக மண்புழு உரம், தொழு உரம், கோழி உரம் போன்ற இயற்கை உரங்கள் நிலத்தை பக்குவப்படுத்தி, பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும்,” என்றார்.
மேலும், “விவசாயிகள் தாங்களே தயாரிக்கும் மண்புழு உரத்தை ஒரு ஏக்கருக்கு சுமார் 2 டன் வீதம் பயன்படுத்தினால், பயிர் மகசூல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அதனுடன் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற இயற்கை ஊட்டச்சத்து கரைசல்களையும் இணைத்து பயன்படுத்தினால், கூடுதல் பலன் கிடைக்கும்,” என்று அவர் தெரிவித்தார். வரவிருக்கும் மழைக்காலத்தை பயன்படுத்தி, பயிர் நடவு செய்வதற்கு முன்பு நிலத்தில் மண்புழு உரத்தை இடுவதன் மூலம் மண்ணை வளப்படுத்தி, அதிக மகசூலைப் பெறலாம் என்றும் அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
Jul 18, 2026 10:03 AM IST
