Last Updated:
சோனம் வாங்சுக்கை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அதே இடத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.
டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக்கை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அதே இடத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, 21 நாளாக லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் நாடாளுமன்றம் நோக்கி நாளை மறுதினம் பேரணி செல்ல உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இன்று காலை ஜந்தர் மந்தருக்கு வந்த காவல் துறையினர், வலுக்கட்டாயமாக சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஜந்தர் மந்தரில் கூடியிருந்த போராட்டக்காரர்களை காவலர்கள் வெளியேற்றினர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மருத்துவர்களின் அறிவுரையின்படியே சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சப்தர்ஜங் மருத்துவமனை அவசர பிரிவில் சோனம் வாங்சுக்குக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சோனம் வாங்சுக் அழைத்துச் செல்லப்பட்ட போது தன்னை ஜந்தர் மந்தருக்குள் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே குற்றம்சாட்டினார். இதுவரை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரி போராடினோம், என்றும் இனி பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அபிஜீத் கூறினார். இன்று முதல் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸ்… அதே இடத்தில் உண்ணாவிரதம் தொடங்கிய அபிஜீத்!


