Last Updated:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் என்ஜினை தயாரிக்கும் முயற்சிகள் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கியது.
வடக்கு மண்டல ரயில்வேவுக்காக 140 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கிய நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வந்தன. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அடுத்து, ரயில் சேவையை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி, இந்தியாவில் ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்த ரயிலை இன்று கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 8 பயணிகள் பெட்டிகள், 2 பைலட் பெட்டிகளுடன் உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயில் இந்தியாவில் இயக்கப்படவுள்ளது.


