Tamilnadu
oi-Nantha Kumar R
திருநெல்வேலி: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் வரிசையில் யார் நிற்பது? என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் இரு நிர்வாகிகள் அடிதடியில் இறங்கிய நிலையில் அதுதொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் முன்னிலையில் காமராஜர் பிறந்தநாள் உறுதி மொழியேற்பு நிழச்சி நடந்தது. ராபர்ட் புரூஸ் எம்பி நடுவில் நிற்க அவருக்கு இருபுறமும் காங்கிரஸ் நிர்வாகிகள் நின்று உறுதி மொழியேற்றனர்.
அப்போது யார் முதல் வரிசையில் நிற்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், இ்ன்னொரு நிர்வாகியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். இருவரும் மாறி மாறிதாக்கி கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிற நிர்வாகிகள் உடனடியாக ஓடிச்சென்று அடிதடியை தடுத்து நிறுத்தினர்.
சண்டையிட்டு கொண்ட இரு நிர்வாகிகளையும் தனித்தனியே பிரித்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

